Published : 09 Jan 2015 09:45 AM
Last Updated : 09 Jan 2015 09:45 AM

பாரீஸ் தாக்குதல்: தீவிரவாதிகளின் அடையாளம் தெரிந்தது

பாரீஸ் பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளில் ஒருவர் போலீஸில் சரணடைந்துள்ள நிலையில் மற்ற இருவர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது.

அவர்கள் பெயர் சையது கவுச்சி (34), செரீப் கவுச்சி (32). இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர்.

இவர்களில் செரீப் கவுச்சி ஏற்ெகனவே தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர். 2008 ம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்க படைகளை எதிர்த்து போரிடுவதற்காக ஆட்களை அனுப்பியதாக செரீப் கவுச்சி கைது செய்யப்பட்டிருந்தார். இதில் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை முடிந்து வெளியே வந்த அவர் இந்த தாக்குதலுக்கு தலைவராக இருந்து செயல்பட்டுள்ளார். அவருக்கு அல்-காய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உண்டு.

தலைமறைவாக இருக்கும் செரீப் கவுச்சி, சையது கவுச்சி இருவரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதை வைத்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.

காரை விட்டுச் சென்றனர்

தாக்குதல் முடிந்ததும் 3 தீவிரவாதிகளும் சாலைக்கு வந்து அங்கிருந்த கார் ஒன்றை கடத்தி சென்றனர். சில மைல் தூரத்தில் அந்த காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி வேறொரு காரை கடத்தி சென்றனர்.

பாரீஸ் நகரில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரெய்ம்ஸ் என்ற இடத்தில் இந்த கார் நின்று கொண்டிருந்தது.

எனவே தீவிரவாதிகள் ரெய்ம்ஸ் நகருக்குள் பதுங்கி இருக்கலாம் என கருதி நகரம் முழுவதும் சுற்றி வளைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் மர்ம மனிதர்கள் புகுந்ததாக தகவல்கள் வந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதி முழுவதும் போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பிரான்ஸில் கடந்த 54 ஆண்டுகளில் இதுபோன்ற எந்த ஒரு மோசமான தீவிரவாத தாக்குதலும் நடந்ததில்லை.

1961 ம் ஆண்டு அல்ஜீரியா தீவிரவாதிகள் ரயிலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இப்போதுதான் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.

இதனால் பிரான்ஸ் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. பாரீஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இது கலவரமாக மாறி விடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

அதிபர் வேண்டுகோள்

பிரான்ஸ் அதிபர் ஹோலாந்த் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் நமது நாட்டில் பாரம்பரியமாக கருத்து சுதந்திரம் உள்ளது. அதன் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் பிரான்ஸ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். ஒற்றுமைதான் நமது பெரிய ஆயுதமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் தாக்குதலையொட்டி நேற்று பிரான்ஸில் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x