Last Updated : 22 Mar, 2017 08:24 PM

 

Published : 22 Mar 2017 08:24 PM
Last Updated : 22 Mar 2017 08:24 PM

பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம்: ஐ.நா. சபை வலியுறுத்தல்

'ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தினால் உலகளவில் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். இதன்மூலம் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்கலாம்' என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக தண்ணீர் தினம் புதன்கிழமை (இன்று) கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளன. அந்த அறிக்கையை யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் ஐரினா பொகோவா நேற்று பாரிஸில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், 'ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை உலகளவில் மக்கள் மீண்டும் பயன்படுத்துவதில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினைத் தீர்க்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐரினா கூறும்போது, 'உலகில் மூன்றில் 2 பங்கு மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதமாவது தண்ணீர் பிரச்சினை உள்ள இடங்களில் வசிக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனா மற்றும் இந்தியாவில் வசிக்கின்றனர். சுத்தமான தண்ணீரையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மறுசுழற்சி மேலாண்மை வாய்ப்பு இருந்தும் அதை மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர்' என்றார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகளவில் தண்ணீர் பற்றாக்குறைதான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கப் போகிறது என்று கடந்த ஆண்டு உலக பொருளாதார அமைப்பின் ஆண்டறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்வதில் வளர்ந்த நாடுகள் முன்னணியில் உள்ளன. ஆனால், வளர்ந்து வரும் நாடுகள், ஏழை நாடுகளில் இது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் தண்ணீர் சார்ந்த நோய்கள் அதிகரித்துள்ளன. அசுத்தமான தண்ணீரால் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் பலியாகின்றனர். கைகளை நன்கு கழுவாமல் விடுவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x