Published : 04 May 2018 09:29 AM
Last Updated : 04 May 2018 09:29 AM

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பதவிக்கு சிலர் போட்டி போட்டனர்: சசிகலா தம்பி திவாகரன் தகவல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிலர் முதல்வர் பதவிக்கு போட்டி போட்டனர் என்று சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள் ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்தார் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதியே இறந்து விட்டார் என்று ஒரு பொதுக்கூட்டத்தில் திவாகரன் கூறினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி திவாகரனுக்கு சம்மன் அனுப்பியது.

அதன்படி, சென்னை சேப்பாக்கம் கலச மகாலில் உள்ள ஆணையத்தில் திவாகரன் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து வெளியே வந்த திவாகரன், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆணையத்தில் பல்வேறு கேள்விகள் கேட்டார்கள். எனது அரசியல் ஈடுபாடு, ஜெயலலிதா உடல்நிலை, மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டார்கள். எனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் தெளிவாக கூறிவிட்டேன். ஜெயலலிதாவுக்கு நாங்கள் எந்த வகையில் உடனிருந்தோம் என்பதைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டனர்.

2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக எனக்கு தகவல் வந்தது. டி.வி.யிலும் செய்தி வந்தது. அதனால் விமானம் மூலம் சென்னை வந்தேன். இரவு 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ என்ற இருதய சிகிச்சை கருவியை இணைத்து கிடத்தியிருந்தார்கள். இது மட்டும்தான் எனக்கு தெரியும். விசாரணை ஆணையத்திலும் இதையேதான் சொன்னேன்.

நானே 2 முறைதான் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன். முதல்முறை வந்தபோது இரவு 11 மணியாகிவிட்டதால், அவர் தூங்கி விட்டார், பார்க்க முடியாது என்று கூறிவிட்டனர். 2-வது முறை வந்தபோதுதான் எக்மோ கருவி இணைக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட இறந்த நிலையில்தான் ஜெயலலிதா இருந்தார்.

ஜெயலலிதாவின் அழைப்பின்பேரில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ நேரில் சென்று பார்த்து இருக்கலாம். காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஜெயலலிதா கலந்துரையாடல் செய்ததாக ஒருமுறை சொன்னார்கள். செப்டம்பர் 27-ம் தேதி இது நடந்தது என்று நினைக்கிறேன்.

ஜெயலலிதா இறந்ததும் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தைதான் முதல்வராக எல்லாரும் தேர்ந்தெடுத்தனர். முதல்வராக வருவதற்கு அன்று சிலர் போட்டியில் இருந்தார்கள். அவர்கள் யார் என்பதைச் சொல்ல விரும்பவில்லை. சசிகலாவைத் தவிர எங்களது உறவினர்கள் யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் யாருமே தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் இயற்கையாகவே இறந்தார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை. இவ்வாறு திவாகரன் கூறினார்.

‘‘தமிழகத்தில் யாரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய மத்திய அரசு சார்பில் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறதே அந்த நபர் யார்?’’ என்ற கேள்விக்கு பதிலளித்த திவாகரன், ‘‘அதையெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோம். பொதுவாக கூறுவோமே தவிர, பெயரை குறிப்பிட்டு சொல்ல மாட்டோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x