Published : 14 Jul 2019 10:06 AM
Last Updated : 14 Jul 2019 10:06 AM
ஆசியாவில் வாழும் பாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு ராஜ நாகம். சுமார் 18 முதல் 22 அடி நீளம் வரை இருக்கும் ராஜ நாகங்கள், மனிதர்களைத் தாக்கும்போது தரையில் இருந்து 6 அடி வரை எழும்பி படமெடுக்கும். மனிதரைக் கடித்தால் அதிகபட்சம் 3 நிமிடங்களிலும், யானையைக் கடித்தால் 20 நிமிடங்களிலும் இறக்கும் அளவுக்கு கடும் விஷத்தன்மை கொண்டவை ராஜ நாகங்கள்.
ராஜ நாகம் மட்டுமே பிற வகை பாம்புகளை கொன்று உண்ணும் வழக்கமுடையவை. மேலும், உலகில் உள்ள பாம்பு இனங்களில் ராஜ நாகம் மட்டுமே பறவையைப் போல கூடுகட்டி, அதில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். பிற பாம்புகளைவிட விஷத்தன்மை மட்டுமின்றி, பார்வைத் திறனும் மிகவும் அதிகம்.
இந்தியா, வியட்நாம், மலேசியா, தென் சீனா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. மிக அரிதாகவே மனிதர்களின் கண்களுக்கு தட்டுப்படும் இவ்வகை ராஜ நாகங்கள், தமிழகத்தில் சதுரகிரி மலை, ராஜபாளையம், நாகர்கோவில் மற்றும் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் காணப்படுகின்றன.
சீரான சீதோஷ்ண நிலை நிலவும் நீராதாரங்கள் உள்ள பசுமையான இலையுதிர்க் காடுகளில் வாழும் இவை, மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு பெரும்பாலும் வராது. ஆனால், தற்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு, நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி உள்ளிட்ட மலையடிவாரக் கிராமங்களில் அடிக்கடி இந்த அரிய வகை ராஜ நாகங்கள் தென்படுகின்றன.
மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும், ஊருக்குள் உள்ள ஓடைகள், கால்வாய்களிலும் இவை சுற்றி வருகின்றன. குறிப்பாக, எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும் பாக்குத் தோப்புகளில் அடிக்கடி காணப் படுவதால், பாக்கு அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டில் மட்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் 6 ராஜ நாகங்கள் வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு, அடர்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தவையாகும். இது வனத் துறையினரையும், வன உயிரின ஆர்வலர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன் கல்லாறு பகுதியில் ஒரு பெண் ராஜநாகம் பிடிபட்ட நிலையில், மேலும் சில நாகங்கள் சுற்றி வருவதாகக் கூறும் கிராமமக்கள், இதனால் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
கடித்தால் சில நிமிடங்களில் மரணம் நிச்சயம் என்ற நிலையில், பகல் நேரங்களில்கூட ராஜ நாகங்கள் தென்படுவதால், மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். தென்னை, வாழை, கரும்பு, பாக்கு போன்ற விவசாயமே வாழ்வாதாரமாக உள்ள நிலையில், தோட்டங்களில் பணிகளைத் தொடரவோ, இருள் சூழ்ந்த பின் வெளியில் நடமாடவோ இயலாத சூழலில் மக்கள் தவிக்கின்றனர்.
ராஜ நாகங்கள் மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லவே முயலும், தனது உயிருக்கு ஆபத்து என்று கருதினால் மட்டுமே மனிதர்களைத் தாக்கும் குணமுடையவை என்று தெரிவிக்கும் சூழலியல் ஆர்வலர்கள், அவற்றின் வாழ்வியல் சூழல் மாசுபட்டு, வாழ்விடம் அழிக்கப்பட்டதால், ஊருக்குள் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, “அருகில் உள்ள மலைக்காட்டிலிருந்து இரை தேடியும், இணை தேடியும் ராஜ நாகங்கள் வருகின்றன. தகவல் தெரிந்தவுடன், பாம்பு பிடிக்கும் வல்லுநர்கள் உதவியுடன் அவற்றைப் பிடித்து, அடர்ந்த காடுகளுக்குள் விடுகிறோம். ராஜ நாகங்களைக் கண்டால் அவற்றை விரட்டவோ, துன்புறுத்தவோ முற்படுவது ஆபத்தானது. ராஜ நாகங்கள் இங்கு அதிகம் வருவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்” என்றனர்.
‘பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’ என்பார்கள். இந்த நிலையில், மேட்டுப்பாளையம் பகுதி கிராம மக்கள், ‘பாம்புகளின் அரசன்’ என வர்ணிக்கப்படும் ராஜ நாகங்களின் தொடர் வருகையால் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணத்தை வல்லுநர்களின் உதவியுடன் கண்டறிந்து, உரிய தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT