Last Updated : 14 Jul, 2019 10:15 AM

 

Published : 14 Jul 2019 10:15 AM
Last Updated : 14 Jul 2019 10:15 AM

தமிழகத்தில் பிச்சைக்காரர்களே இல்லையா..!

இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளதாகவும், அதில் தமிழகத்தில் 6,814 பேர் உள்ளனர் என்றும் அப்போதைய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலோட் கடந்தாண்டு மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்' என்று திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு கூறியதற்கு சட்டசபையில் பதிலளித்த சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா, "தமிழகத்தில் பிச்சைக்காக யாரும் கையேந்தக் கூடாது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதுதான் அதிமுக அரசின் கொள்கை. தெருவோரத்தில் கையேந்தி பிச்சை கேட்பவர்கள்தான் பிச்சைக்காரர்கள். அவர்களைக் காவல்துறையினர் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினால்தான், அவர்களை இந்தத் திட்டத்தின் மூலம் மறுவாழ்வு அளிக்க முடியும். தமிழகத்தில் அதுபோன்ற பிச்சைக்காரர்கள் யாருமே இல்லை. மறுவாழ்வுத் திட்டத்துக்காக 9.5 ஏக்கர் ஒதுக்கப்பட்ட நிலத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா என பார்வையிட்டோம்.

உளுந்தூர்பேட்டை பரிக்கல் கோயில் உள்பட மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள், மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடை வீதிகள், உணவகங்கள் என எங்கும் பிச்சைக்காரகள் நீக்கமற நிறைந்து பொதுமக்களிடம் கையேந்துவதை காண முடிந்தது. இவர்களில் பெரும்பான்மையானோர் மூதாட்டிகளே என்பதையும் காண முடிந்தது. இதுகுறித்து விவரம் அறிந்தவர்களிடம் கேட்டபோது, சாலைகளில் கையேந்தி பிச்சை எடுப்பவர்கள் அனைவரும் அனாதைகளோ, குடும்பத்தினாரால் கைவிடப்பட்டவர்களோ இல்லை. பெரும்பாலும் குடும்பத்தாரின் சம்மதத்தோடு பகலில் பிச்சை எடுத்துவிட்டு இரவில் அவர்கள் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். இப்படி வெளியே வருபவர்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 200 முதல் ரூ300 வரை வருவாய் ஈட்டுகின்றனர். இதன் மூலம் மாதம் குறைந்தது ரூ 6 ஆயிரம் வரை அவர்களுக்கு கிடைக்கிறது. பிச்சை எடுக்க அனுப்பும் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுத்தாலே பிச்சைக்காரர்களை ஒழிக்கலாம் என்கின்றனர.

'இப்படி சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை எப்போது பிடிக்கப்போகிறீர்கள்?' என எஸ் பி ஜெயக்குமாரை கேட்டபோது, மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிபவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுண்டு. அப்போது நீதிமன்ற உத்தரவின் பேரில், பிடிபட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.

நல்ல மனநிலையில் உள்ள பிச்சைக்காரர்களை பிடித்து சமூக நலத்துறையில் ஒப்படைக்குமாறு இப்போதே போலீஸாருக்கு உத்தரவிடுகிறேன். அவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்யவும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் தேவையில்லை'' என்று கூறினார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பிச்சை எடுப்பவர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க மாட்டார். அவர்கள் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த நகரங்களில் இருப்பவர்களில் சிலர் விழுப்புரத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தங்களது அடையாளம் தெரியாமல் இருக்க இப்படி ஊர் விட்டு ஊர் வந்து பிச்சை எடுக்கின்றனர் என்ற கூடுதல் தகவலையும் எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x