Published : 11 Jul 2019 03:07 PM
Last Updated : 11 Jul 2019 03:07 PM
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கின்றன என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில், தமிழக அரசால் நடத்தப்பட்ட இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக பேசியதாவது:
"நாங்கள் சொல்வதை செய்வோம், சொல்லாததையும் நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம். இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கின்றன. புதிய புதிய தொழில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தான், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு காலக்கட்டத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் வரும். அந்த ஆர்வத்தை பயன்படுத்தி தொழில் தொடங்குகிறோம். ஆகவே, முதல் வருடம் நடத்தி விட்டீர்கள், அது முடிந்த பிறகு தான் இரண்டாவது நடத்த வேண்டும் என்றால், அது நடக்காது. ஆகவே, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திக் கொண்டு இருக்கின்ற போது, எந்தெந்த மாநிலம் தொழில் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலம் என்று தேர்ந்தெடுத்து, இங்கே தொழிலதிபர்கள் வருவார்கள்.
ஆகவே, இந்தியாவை பொறுத்தவரைக்கும், தொழில் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு என்று இன்றைக்கு தொழிலதிபர்கள் எல்லாம் முடிவு எடுத்துதான், 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்ய முன்வந்து, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்ல, ஒரு வாரத்திற்கு முன்னர் கூட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நான் அடிக்கல் நாட்டினேன்.
ஒரு அரசாங்கம் பல பேரை சந்தித்து, இன்றைக்கு யார் யாருக்கெல்லாம் இதில் ஆர்வம் இருக்கின்றதோ, இந்தியா முழுவதும் சரி, வெளிநாட்டிலும் சரி, அமைச்சர்கள், துறையைச் சேர்ந்த அதிகாரிகள், எல்லாம் வெளிநாட்டுக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும், ஆகவே, நீங்கள் முன்வாருங்கள் என்று சொல்லி அழைத்ததன் பேரில் தான், இந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இவ்வளவு பேர் கலந்து கொண்டு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கிறது.
அதைக்கூட எதிர்க்கட்சி தலைவர் குறையாக பேசினார். வீதியிலே சென்றவர்கள் போனவர்கள் எல்லாம் கோட்-சூட் போட்டு அதில் அமர வைத்தீர்கள் என்ற அந்த செய்தியை எல்லாம் பத்திரிகையிலே பார்த்தேன். அந்த தொழிலதிபர்கள் எல்லாம் எங்களை சந்தித்து வருத்தப்பட்டார்கள். ஆகவே, தொழில் முதலீட்டை அதிகமாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதன் அடிப்படையிலே தான், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகின்றோம்.
கிராமத்திலே இருப்பவர்களுக்கு கூட வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் புதிய புதிய தொழிற்சாலைகள் உருவாகின்றபோது, அதற்கு தேவையான மானியத்தை நாங்கள் கொடுக்கின்றோம். அதுமட்டுமல்ல, சிறு தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான மாவட்டங்களில் அமைச்சர்களும், அதிகாரிகளும் சென்று, அங்கே நீங்கள் எவ்வளவு தொழில் முதலீடு செய்வீர்கள், 5 கோடியோ, 10 கோடியோ அல்லது 20 கோடியோ யார் முதலீடு செய்ய முன்வருகின்றார்களோ, அவர்களை எல்லோரையும் அழைத்துப்பேசி, அதற்கு தேவையான உதவிகள் அரசால் செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்து, அவர்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலே கையெழுத்திட்டு இருக்கிறார்கள்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT