Published : 11 Jul 2019 01:04 PM
Last Updated : 11 Jul 2019 01:04 PM

வேலூர் தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார்: பிரேமலதா உறுதி

வேலூர் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார் என்று பிரேமலதா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, குடியாத்தத்தில் நடைபெற்ற உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''வேலூர் தொகுதிக்கு வேண்டிய வேட்பாளர் யார் என்பதை மக்கள் நிர்ணயிப்பார்கள்.

அவர்கள் நிச்சயம் நல்ல முடிவாக எடுப்பார்கள். இன்றைக்கு நிலவும் காலகட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை மக்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள்.

இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார், நான் வருவேன். மகன் விஜய பிரபாகரன் மற்றும் கட்சியைச் சேர்ந்த அத்தனை நிர்வாகிகளும் பிரச்சாரத்துக்கு வருவர். எங்களின் முழு ஒத்துழைப்பும் ஏ.சி.சண்முகத்துக்கு உண்டு'' என்றார் பிரேமலதா.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சூழ்நிலையில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனின் நெருங்கிய உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்துள்ளது. திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x