Published : 11 Jul 2019 11:54 AM
Last Updated : 11 Jul 2019 11:54 AM

நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைப்பது உதவாது; கைவிடுக: வைகோ வலியுறுத்தல்

நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சி பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது, அதை கைவிடவேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக வைகோ இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 "பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் ஏற்படுத்தும் சட்டத் திருத்த மசோதா கொண்டுவர ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.

அனைத்து நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மத்திய அரசு ஒரே தீர்ப்பாயத்தை அமைக்கும் என்று மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் 2016 டிசம்பரில் கருத்துக் கூறியபோதே அதனைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டேன்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956 இல் திருத்தம் செய்து, புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சினைகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா ஆகிய நதிநீர் பிரச்சினைகளுக்கு நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு 50 ஆண்டு காலம் ஆகின்றன.

ரவி, பியாஸ் நடுவர் மன்றம் 33 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் 29 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை இன்று வரை தீர்க்க முடியவில்லை.

இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்பு தனித் தனி நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டும், நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படவில்லை. நடைமுறையில் உள்ள இந்தச் சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல், ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சி பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் சட்டப்படியும், நியாயப்படியும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், மத்திய பாஜக அரசு அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மேலாண்மை ஆணையம் என்று பெயருக்கு ஒரு அமைப்பை உருவாக்கியது.

ஆனால் இந்த ஆணையத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுகிற அதிகாரம் இல்லை என்பதை நடைமுறையில் பார்க்கிறோம். இந்நிலையில், மத்திய அரசின் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு இன்னும் பல ஆண்டுகளுக்கு நதி நீர் பிரச்சினையை நீடிக்கவே வழி செய்யும்.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்நாடுதான் என்பதை உணர்ந்து, தமிழக அரசு இந்தச் சட்ட முன் வடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு நதி நீர் சிக்கல்களுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்"

இவ்வாறு  வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x