Published : 11 Jul 2019 11:51 AM
Last Updated : 11 Jul 2019 11:51 AM

குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்த விஜயகாந்த்; மித்ரன் படப்பலகையை வைத்து வழிபாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது குடும்பத்துடன் இன்று காஞ்சிபுரம் சென்று  அத்திவரதரை தரிசனம் செய்தார். அப்போது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படமான 'மித்ரன்' பெயர்ப் பலகையையும் அத்திவரதர் சன்னிதியில் வைத்து வழிபட்டனர்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் தொடர்ந்து  11-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் நடைபெறுவதால் ஏராளமானோர் வந்து குவியத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் அதிகரிப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

காலையில் 6 மணிக்கு வரிசையில் வந்து நின்ற பொது மக்கள் பலர் பகல் 12 மணிக்கு மேல்தான் அத்திவரதரை தரிசனம் செய்ய முடிந்தது. இதனால் வெளியே வந்த முதியவர்கள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டனர்.

விஐபி நுழைவு வாயிலில் பொதுவாக உள்ளே சென்று உடனடியாக அத்திவரதரை தரிசிக்கும் நிலை இருந்தது. ஆனாலும் அதிலும் நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிலர் வெளியே வரும் வழியின் வழியாக உள்ளே நுழைந்ததால் நெரிசல் ஏற்பட்டது. விஐபிக்கள் சுமார் 30 நிமிடம் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்தனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் மற்றும் உறவினர்களோடு இன்று கோயிலுக்குச் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார். காவி நிறப் பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதரை காலை 9.30 மணியளவில் சென்று விஜயகாந்த் குடும்பத்தினர் வழிபட்டனர். அப்போது சண்முக பாண்டியன் நடிக்கும் படமான 'மித்ரன்' படத்தின் பெயர்ப் பலகையை அத்திவரதர் சன்னிதியில் வைத்து வழிபட்டனர். வழிபாடு முடிந்தவுடன் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டன.

குடியரசுத் தலைவர் வருகை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (ஜூலை 12) காஞ்சிபுரம் வருகிறார். அவர் விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வருகிறார். மாலை 3 மணிக்கு மேல் 4 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்கிறார். அதேபோல பிரதமரும் விரைவில் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரைத் தரிசனம் செய்வார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x