Published : 08 Jul 2019 02:25 PM
Last Updated : 08 Jul 2019 02:25 PM

ஓய்வூதியப் பலன்களைத் தர முடியாவிட்டால் புதிய பேருந்தை வழங்கக் கோரிய வழக்கு: போக்குவரத்துக் கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓய்வூதியப் பலன்களைத் தர முடியவில்லை என்றால் புதிய பேருந்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துக் கழகம் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர்களாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராதாகிருஷ்ணன் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்கில் தாங்கள் பணி ஓய்வு பெற்ற பின்பும் தங்களுக்கு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஓராண்டாக ஓய்வூதியப் பலன்களுக்காக காத்திருப்பதாகவும் எனவே ஓய்வூதியப் பலன்களை வட்டியோடு சேர்த்துத் தர வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அவர்கள் ஓய்வு பெற்ற நாளில் உரிய ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அப்படி போக்குவரத்துக் கழகம் தர முடியவில்லை என்றால், போக்குவரத்துக் கழகத்தின் புதிய பேருந்து ஒன்றை வழங்க  உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் இதுகுறித்து எட்டு வார காலத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விழுப்புரம் பிரிவு நிர்வாக இயக்குநர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x