Published : 25 Jun 2019 04:27 PM
Last Updated : 25 Jun 2019 04:27 PM

சட்டவிரோத பேனர் வழக்கு; அரசின் முடிவு சோர்வை ஏற்படுத்துகிறது: உயர் நீதிமன்றம்

சட்டவிரோத பேனர் வழக்கில்  தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசின் மீது டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய தமிழக அரசு மீண்டும் ஒரு வாரம் கால அவகாசம் கோரியது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற கால அவகாசம் கேட்டால் உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.

சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கிக் கொடுக்கும் அரசு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கால அவகாசம் கோருவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

சட்டவிரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடையச் செய்து விட்டதாக கண்டனம் தெரிவித்தனர்.

அரசின் செயல்பாடுகளால் மனுதாரரிடம் மன்னிப்பு கோரும் நிலையை  நீதிமன்றத்திற்கு தமிழக அரசு ஏற்படுத்திவிட்டதாக  வேதனை தெரிவித்த நீதிபதிகள், அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும், நாளை அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x