Published : 25 Jun 2019 01:59 PM
Last Updated : 25 Jun 2019 01:59 PM

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தின் ஆவணங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட 224.42 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தின் ஆவணங்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிச் சென்ற பிறகும், இந்த மருத்துவமனைக்கு இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும், தமிழக அரசு அதற்கான நிலத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய நிதிக் குழுவைச் சேர்ந்த சஞ்சய்ராய் தலைமையிலான மத்தியக் குழுவினர் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த குழுவினரும் உடன் வந்திருந்தனர். மொத்தம் 8 பேர் அடங்கிய குழுவினர் கூட்டாக இந்த ஆய்வை மேற்கொண்டனர். 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்காக மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை தமிழக அரசு நிறை வேற்றியுள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் நாகராஜ் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் 224.42 ஏக்கர் பரப்பளவிலான நிலம் அளவீடு செய்யப்பட்டது. அளவீடு முடிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் (பொறுப்பு) வழங்கப்பட்டன. அந்த ஆவணங்கள் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் எய்ம்ஸ் பணிகள் வேகமெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x