Published : 25 Jun 2019 11:47 AM
Last Updated : 25 Jun 2019 11:47 AM

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்; அமைச்சர் பாண்டியராஜன் பதிலளிக்க மறுப்பு

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க அமைச்சர் பாண்டியராஜன் மறுத்துவிட்டார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28-ம் தேதி தொடங்கி, ஜூலை 31 வரை நடைபெறுகிறது. இதுதொடர்பாகப் பேசிய பேரவைத் தலைவர் தனபால், மொத்தத்தில் 23 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் ஜூலை 1-ம் தேதி விதிமுறைகளின்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தனபால் தெரிவித்தார்.

திமுக சார்பில் கடந்த மே 7-ம் தேதி பேரவைத் தலைவர் தனபால் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வழங்கப்பட்டது. இது குறித்து கூட்டத்தொடரில் துணை பேரவைத் தலைவர் தலைமையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்நிலையில் ஆவடி அருகே உள்ள துணை மின் நிலையத்தில் ஆய்வு செய்த பின்பு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஆவடி மக்கள் பயன்பெறும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் திறக்கப்படும் என்றும் இன்னும் 6 வாரங்களில் ஆவடியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசின் மீது ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்தும் பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாண்டியராஜன், ''வேறெதாவது நல்ல கேள்விகளைக் கேளுங்கள். அரசியலில் என்னால் எந்த வாக்குறுதியும் தர முடியாது. என் துறையைப் பற்றிக் கேளுங்கள். என் ஊரைப் பற்றி, என் மாவட்டத்தைப் பற்றிக் கேள்வி கேளுங்கள். வளர்ச்சி ரீதியான கேள்விகளைக் கேளுங்கள், பதில் சொல்கிறேன். இதுகுறித்துப் பேச முடியாது'' என்றார் பாண்டியராஜன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x