Published : 25 Jun 2019 11:27 AM
Last Updated : 25 Jun 2019 11:27 AM
நடிகர் சங்கத் தேர்தல் பாதுகாப்பு வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தலையிட்டதாக ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மைலாப்பூர் புனித எப்பாஸ் கல்லூரியில் நடத்துவதற்குத் தேவையான காவல்துறை பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி பொதுச் செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கை ஜூன் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அதன்பின்னர், தேர்தல் நடத்தத் தேவையான பாதுகாப்பை வழங்க சென்னை மயிலாப்பூர் துணை ஆணையருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டாம் என்றும், இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தால் ஜூன் 23 தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போகும் என அனந்தராமன் என்பவர் ஜூன் 22 மாலை 4.20 மணிக்கு தொலைபேசி மூலமாக நீதிபதியைத் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மாலை 4.45 மணிக்கு நீதிபதி வீட்டிற்கு நேரிலும் வந்து வழக்கை ஒத்திவைக்க அனந்தராமன் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
நடிகர் சங்கம் நிதி நெருக்கடியில் இருந்த காலத்தில் மிகவும் உதவிகரமாக ஐசரி கணேஷ் இருந்ததால், அதற்கு கைமாறாக வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து தேர்தலைத் தள்ளிவைக்கும்படி ஐசரி கணேஷுக்காக அனந்தராமன் தன்னை அணுகியதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, இதன் காரணமாக இருவர் மீதும் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதி விசாரணை நடைமுறையில் முறைகேடாக தலையிட்ட ஐசரி கணேஷ், அனந்தராமன் இருவரையும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் ஏன் தண்டிக்க கூடாது என்பது குறித்து இருவரும் நான்கு வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT