Published : 25 Jun 2019 10:26 AM
Last Updated : 25 Jun 2019 10:26 AM
அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக பேசியதாக ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், "பிடிக்காவிட்டால் என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டியதுதானே" என தங்கதமிழ்ச்செல்வன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
சர்ச்சையை ஏற்படுத்திய ஆடியோ:
முன்னதாக, மதுரையில் இருந்து வந்த சில நிர்வாகிகள் தேனியில் தங்கதமிழ்ச்செல்வனுக்குத் தெரியாமல் ரகசியக்கூட்டம் நடத்தியுள்ளனர்.
இதில் தங்கதமிழ்ச்செல்வன் விரைவில் அதிமுக.வுக்கு செல்ல உள்ளதால் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.
இதில் நிர்வாகிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த தகவல் தெரிந்த தங்கதமிழ்ச்செல்வன் தினகரனின் உதவியாளரிடம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
அதில் "நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் எல்லாரும் அழிந்துவிடுவீர்கள். இந்த மாதிரி அரசியல் செய்ய வேண்டாம் என்று உங்கள் அண்ணன் தினகரனிடம் போய் சொல். இந்த மாதிரி நடந்து கொண்டால் எப்போதும் நீங்கள் ஜெயிக்க மாட்டீர்கள்" என்று ஆவேசமாக பேசுவது தெரிகிறது.
இது அமமுக கட்சிக் குழுவில் பகிரப்பட்டு பின்பு படிப்படியாக பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவியது.
ஆவேசமடைந்த டிடிஎஸ்:
இந்நிலையில், ஆடியோ குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "அமமுகவில் நிர்வாகம் சரியில்லை. நெல்லை, கோவை மண்டலப் பொறுப்பாளர்களாலேயே அங்கு கட்சி சரிவை சந்தித்தது என்று நான் பேசியது உண்மையே.
இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் என்னை நேரில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஒருவேளை நான் தவறு செய்திருந்தால் கட்சியிலிருந்து நீக்கியிருக்கலாம். அதனைவிட்டுவிட்டு சின்னதனமாக செயல்படுகின்றனர். என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர். இதற்குமேலே நான் வேறெதுவும் பேச விரும்பவில்லை" எனக் கூறி இணைப்பைத் துண்டித்தார்.
இதனால்,தங்கதமிழ்ச்செல்வன் அமமுக மீது அதிருப்தியில் இருப்பது மீண்டும் வெளிப்படையாக உறுதியாகி இருக்கிறது.
இதற்கிடையில் சென்னையில் இன்று டிடிவி தினகரன் தலைமையில் அமமுக தேனி மாவட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT