Last Updated : 25 Jun, 2019 12:00 AM

 

Published : 25 Jun 2019 12:00 AM
Last Updated : 25 Jun 2019 12:00 AM

தேனி அமமுகவில் அடிக்கடி நடைபெறும் ரகசிய கூட்டங்கள்: தங்கதமிழ்ச்செல்வன் முக்கிய முடிவெடுக்க திட்டமா?

தேர்தல் தோல்விக்குப் பிறகு தேனிமாவட்ட அமமுகவில் மாற்றுக் கருத்துகள் அதிக அளவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. நிர்வாகிகள் பலர் அதிமுகவுக்கு இடம்பெயரும் நிலையில், தங்கதமிழ்ச்செல்வனின் ரகசியக் கூட்டங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.

அமமுகவின் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வனை பொருத்த அளவில் நடந்து முடிந்த தேர்தல் அவரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருந்தது. ஏற்கெனவே ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தஅவர், தகுதி இழப்புக்கு உள்ளானார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை எதிர்த்துப் போட்டியிட வலுவான வேட்பாளர்என்ற அடிப்படையில் தங்கதமிழ்ச்செல்வன் தேனி மக்களவைத் தொகுதியில் களமிறக்கப்பட்டார். ஒருவேளை ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி கைவசமாகியிருக்கும். ஆனால், கட்சித்தலைமைக்கு கட்டுப்பட்டு மக்களவைக்கு மாறியதால் எம்எல்ஏ வாய்ப்பும் அவருக்கு பறிபோனது. இது தங்கதமிழ்ச்செல்வனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சமீப காலமாகவே அவருடைய செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அணிமாறத் தொடங்கினர். கடந்த ஒரு மாதமாகவே போடி, கூடலூர், கம்பம் என பல பகுதிகளில் அமமுகவினர் அதிக அளவில் அதிமுகவுக்கு திரும்பி உள்ளனர். மேலும் தங்கதமிழ்ச்செல்வனின் செயல்பாடுகளிலும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்களது கட்சியினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து அமமுகவினர் கூறுகையில், ஏற்கெனவே அதிமுகவில் மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ.

எம்பி., தலைமைக்கு நெருக்கம் என்று கம்பீரமாக வலம் வந்தவர் தங்கதமிழ்ச்செல்வன். தற்போது எந்தப் பதவியும் இல்லாமல், எதிர்காலம் குறித்த சிந்தனையுடன் உள்ளார்.

மேலும், முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமான சிலருடன் தொடர்புகொண்டு பேசி வருகிறார். சில நாட்களில் அவர் முக்கிய முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் என்றனர்.

இதற்கிடையே, தங்கதமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ரகசியக் கூட்டம் போட்டு கருத்துக்கேட்டு வருகிறார். கடந்த வாரம் புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் சுமார் 4 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் அழைத்து, தேர்தல் தோல்வி பற்றி கேட்டறிந்தார்.

இதேபோல் நேற்று தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தங்கும் விடுதியிலும் ரகசியக் கூட்டம் நடந்தது. இதில் அவருக்கு மிக நம்பிக்கையான நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர். எனவே, தங்கதமிழ்ச்செல்வன் விரைவில்முக்கிய முடிவெடுக்க வாய்ப்புஉள்ளதாகவே தெரிகிறது எனஅவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

ஆடியோவால் பரபரப்பு

நேற்று முன்தினம் மதுரையில் இருந்து வந்த சில நிர்வாகிகள் தேனியில் தங்கதமிழ்ச்செல்வனுக்குத் தெரியாமல் ரகசியக்கூட்டம் நடத்தியுள்ளனர். இதில் தங்கதமிழ்ச்செல்வன் விரைவில் அதிமுக.வுக்கு செல்ல உள்ளதால் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.

இதில் நிர்வாகிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த தகவல் தெரிந்த தங்கதமிழ்ச்செல்வன் தினகரனின் உதவியாளரிடம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ‘நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் எல்லாரும் அழிந்துவிடுவீர்கள். இந்த மாதிரி அரசியல் செய்ய வேண்டாம் என்று உங்கள் அண்ணன் தினகரனிடம் போய் சொல். இந்த மாதிரி நடந்து கொண்டால் எப்போதும் நீங்கள் ஜெயிக்க மாட்டீர்கள்' என்று ஆவேசமாக பேசுவது தெரிகிறது. இது அமமுக கட்சிக் குழுவில் பகிரப்பட்டு பின்பு படிப்படியாக பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x