Published : 21 Jun 2019 10:37 AM
Last Updated : 21 Jun 2019 10:37 AM

அரசுப் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இதனையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் பல்வேறு இடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில்,  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

யோகா நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், "மத மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் ஒரு வகுப்பறையில் யோகா பயிற்சி அளிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அதற்கான நிதிகள் ஒதுக்குவதற்கும் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்குமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கவனச்சிதறல் இன்றி கல்வி கற்க மாணவர்களுக்கு யோகா உதவுகிறது.

யோகா கற்றுத்தர 13000 பயிற்சியாளர்கள் தயாராக உள்ளனர். அவர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை செய்துதர வேண்டும். அதனை எப்படி செயல்படுத்துவது என்பதை அரசு ஆராய்ந்து வருகிறது" எனக் கூறினார்.

மேலும், "அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை இல்லை. பாடப்புத்தகங்களில் உள்ள தவறான எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டும்தான்; இதில் எவ்வித மாற்றமும் இல்லை" என அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x