Published : 19 Jun 2019 11:03 AM
Last Updated : 19 Jun 2019 11:03 AM
அடிப்படை வசதி, அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''போதிய இடவசதி, கட்டமைப்பு , சுகாதாரம், பாதுகாப்பு இன்றி அங்கீராமில்லாத வகையில் 3,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகின. இதன் அடிப்படையில் சென்னையில் மட்டும் 331 தனியார் பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்பட்டுவருவது கண்டறியப்பட்டுள்ளது.
அப்பள்ளிகளின் பட்டியலை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருப்பதோடு அங்கு படிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ் தகுதியற்றது என்றும் அரசு நடத்தும் தேர்வுகள் எழுத இயலாது எனவும் அறிவுறுத்தி உள்ளார். இதனால் இப்பள்ளிகளில் தற்போது படித்துவரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மாணவர்களின் நலன் கருதி மாநிலம் முழுதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்தில் போதிய அடிப்படை வசதியின்றியும் அங்கீராமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டுகிறோம்.
மேலும் நீக்கமுடியாத வடுவாக அமைந்திட்ட கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்து சம்பவத்தைக் கருத்தில் கொண்டும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு போதிய வசதி, பாதுகாப்பின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT