Published : 18 Jun 2019 07:41 PM
Last Updated : 18 Jun 2019 07:41 PM

13 மாவட்டங்களில் நாளையும் அனல் காற்று; பகல் நேர வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில்  13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 முதல் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

4 நாட்களுக்குப் பின்னர் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ''தமிழகத்தில் தினந்தோறும் பகல் நேர வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பகலில் வீசும் அனல்காற்றால் வாகன ஓட்டிகள், வயதானவர்கள் கடும் பாதிப்படைகின்றனர். இதே வெப்பநிலை 24 மணி நேரம் வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, மதுரை ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வெப்பக் காற்று வீசும். இதனால் அந்த மாவட்ட மக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

பகல் நேர வெப்பநிலை 100  டிகிரியைத் தாண்டும். 6 டிகிரிவரை கூடுதலாக வெப்பம் உயரக்கூடும். இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்த 4 அல்லது 5 நாட்களில் வடக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது, இதன் பின்னர் வட தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும்'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x