Published : 17 Jun 2019 07:38 PM
Last Updated : 17 Jun 2019 07:38 PM
நடிகர் சங்கத் தேர்தலில் போலீஸார் புதிதாக ஒரு முடிவு எடுப்பதால் போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் புதிய மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இம்மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. தேர்தல் நடப்பதற்கு முன்னர் ஆயிரம் அறிக்கைப் போர்கள், புகார்கள் என தேர்தல் பரபரப்பான சூழலை நோக்கி நகர்கிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் கட்சியின் தலையீடு உள்ளதென்று இருபுறமும் பரஸ்பரம் குற்றச்சாட்டை வைத்து வரும் நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாட்டைக் காரணம் காட்டி போலீஸார் மாற்று இடம் குறித்து பேசுவதாகத் தகவல் வெளியாகியது.
சங்கத் தேர்தலுக்கு இ5 நாட்கள்கூட இல்லாத நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து விஷால் உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில் கூறியிருப்பதாவது:
“சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
வணிகர் சங்கம் தொடர்பாக தனக்கு எதிரானவர்கள் அளித்த புகாரை பரிசீலித்த பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தினர் கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் விஷால் அணிக்கும், எதிரணிக்கும் பிரச்சினை உள்ள சூழலில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், தேர்தல் நடைபெற உள்ள இடம் அமைச்சர்கள் குடியிருப்புகள், நீதிபதிகள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ள பகுதி என்பதால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆய்வாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வேறு இடத்திற்கு மாற்ற பரிந்துரைக்கும்படி கல்லூரி நிர்வாகத்திற்கு ஆய்வாளர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் காவல்துறை அனுமதி பெற்றால் தான் தேர்தலை நடத்த முடியும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்குப் பாதுகாப்பு கோரி ஏற்கெனவே காவல்துறை ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனு நிலுவையில் இருப்பதால், அதைப் பரிசீலித்து பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்”.
இவ்வாறு விஷால் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு பட்டியலிடப்பட்டு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT