Published : 12 Jun 2019 02:12 PM
Last Updated : 12 Jun 2019 02:12 PM

ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு இனி வர வாய்ப்பில்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு இனி வர வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்த நிலையில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று (புதன்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சந்திப்பு முடிந்து திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தேர்தலுக்குப் பின்பு நடைபெறுகிற வழக்கமான கூட்டம்தான் இது. அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டமாக நடைபெற்றது. இதில் கட்சிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசப்பட்டது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சிலர் கூறியதால், கூட்டப்பட்ட கூட்டம் என்று எதுவும் இல்லை.

இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதகமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விவாதித்தோம். இன்று எல்லோருமே மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எந்தப் பிரச்சினையும் இல்லை.

இனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வருவதற்கு வாய்ப்பில்லை. மத்திய அமைச்சரவையில் தமிழகம் இடம்பிடிப்பது குறித்து எதுவும் பேசவில்லை'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x