Published : 24 May 2019 12:00 AM
Last Updated : 24 May 2019 12:00 AM

மதுரையை அதிமுக பறிகொடுத்தது எப்படி?

மதுரை மக்களவைத்தொகுதியில் அதிமுக வுக்கு நல்ல வாக்கு வங்கி, எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் செல்வாக்கு ஆகியன கைகொடுக்காததால் அதிமுக வேட்பாளரான அவரது மகன் ராஜ்சத்யன் தோல்வியடைந்துள்ளார்.

கடந்த மக்களவைத்தேர்தலில் அதிமுக சார்பில் மக்களிடம் பெரியளவில் அறிமுகம் இல்லாத மாநகராட்சி கவுன்சிலராகி துணை மேயரான கோபாலகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முதல் முறையாக மதுரை மக்களவைத்தொகுதியில் அதிமுக வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10-ல் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. தென் மாவட்டத்தில் மதுரை அதிமுகவுக்கு செல்வாக்கான மாவட்டமாக இருந்து வந்தது. கட்சியின் கட்டமைப்பு பலமாக இருந்ததால், இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில் மதுரையும் இருந்தது. அதனால், மதுரையில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி நிலவியது.

இதில், துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளராகவும் இருந்த சிட்டிங் எம்பி கோபாலகிருஷ்ணனுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சீட் கொடுக்காமல் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், வடக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனுக்கு சீட் வழங்கப்பட்டது.

இதனால், அதிருப்தியில் கோபால கிருஷ்ணன் சரியாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. அவர் சார்ந்த சமூகத்தினர் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாகத் திரும்பினர். மதுரை அதிமுகவில் ராஜன் செல்லப்பா ஏற்கெனவே மாவட்டச் செயலா ளராகவும், எம்எல்ஏ-வாகவும் இருக்கும் நிலையில் அவரது மகனுக்கு சீட் கொடுத்தது கட்சியின் முக்கிய மூத்த நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பா மகனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததாலும் அவர் மேலே கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதால் அவரது பேச்சைக் கேட்டு கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணி செய்யவில்லை. அவருமே ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டார்.

புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை பக்கமே தலைகாட்டவில்லை. அவர் ஓ.பன்னீர் செல்வம் மகன் போட்டியிடும் தேனி தொகுதியிலேயே முடங்கிவிட்டார். அவர் மதுரை மக்களவைத் தொகுதியில் ஒரு முறைகூட பிரச்சாரத்துக்கு வரவில்லை. ராஜன் செல்லப்பாவும், அவரது மகனுமே ஒட்டுமொத்த தேர்தல் பணியையும் தலையில் தூக்கிப்போட்டு செய்தனர்.

மேலும், தேர்தல் செலவுக்குக் கட்சியில் இருந்து ராஜன் செல்லப்பாவுக்கு ஒரு பைசாகூட வழங்கவில்லை. அதனால், அவரது சொந்தப் பணத் தைப்போட்டு ஓரளவு மட்டுமே செலவு செய்ய முடிந்தது. முழுமை யாக தேனியைப்போல் வாக்காளர்களை ‘திருப்தி’படுத்த முடியவில்லை.

மேலும், அதிமுகவில் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கே வாய்ப்புகள் வழங்கப்படுவதாக கூறி மற்ற சமூகத்தினர் அதிருப்தியடைந்தனர். மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதோடு, கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் தேர்வான ராஜன் செல்லப்பா தனக்கென ஒரு செல்வாக்கை வளர்த்து வைத்திருந்தார். ஆனால் அந்த செல்வாக்குக் கூட மகன் ராஜ் சத்யனுக்கு கைகொடுக்கவில்லைகடந்த முறை கஷ்டப்பட்டு வெற்றிபெற்று மதுரை மக்களவைத்தொகுதியில் முதல் முறையாக வெற்றிபெற்ற அதிமுகவால் இந்த முறை தக்கவைக்க முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x