Last Updated : 21 May, 2019 12:00 AM

 

Published : 21 May 2019 12:00 AM
Last Updated : 21 May 2019 12:00 AM

திருச்சுழி அருகே தினமும் குடிநீருக்காக 5 கி.மீ தூரம் அலையும் கிராம மக்கள்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கிராம மக்கள் குடிநீருக்காக தினமும் 5 கி.மீ. தூரம் அலைந்து வருகின்றனர்.

திருச்சுழி அருகே உள்ளது அன்னலட்சுமிபுரம் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து,மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு சில ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் நடைபெற்றது. அதோடு, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமும் போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்தக் கோடையில் மழை இல்லாததாலும், குடிநீர் தட்டுப்பாடு காரணமாகவும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு குடும்பத்துக்கு 2 குடம் நீர் மட்டுமே கிடைக்கிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: 10 நாட்களுக்கு ஒருமுறை சிறிதளவு விநியோகம் செய்யப்படும் தாமிரபரணி நீரும் சுகாதாரமில்லாமல் உள்ளதால் பலருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து விட்டதால் குடிநீர் தவிர்த்து பிற உபயோகத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். குடிநீருக்காக தினமும் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆனைக்குளம் கிராமத்துக்குச் சென்று குடங்களில் தண்ணீர் எடுத்து வருகிறோம்.

வெளியூர்க்காரர்கள் இங்கு வந்து தண்ணீர் பிடிக்கக் கூடாது என அக்கிராமத்தினரும் அவ்வப்போது பிரச்சினை செய்து வருகின்றனர். மழையின்றி குளம், குட்டைகள் வறண்டுள்ளதால் கால்நடை களுக்கு தண்ணீர் கிடைப்பது பெரும்பாடாக உள்ளது. கால்நடைகள் நீர் அருந்த அரசு கட்டிக் கொடுத்த தொட்டியும் சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் பல முறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்கள் கிராமத்தில் கூடுதலாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் பிரச்சினைையை மாவட்ட நிர்வாகம் தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x