Published : 20 May 2019 12:00 AM
Last Updated : 20 May 2019 12:00 AM
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை முன்னிட்டு மதுக் கடைகள் மூடப்பட்டதால் எல்லையோர டாஸ்மாக் கடையில் மது குடிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றதிருப்பரங்குன்றம் உட்பட நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைந்திருக்கும் மாவட்டங்களில் மே 17 முதல் நேற்று வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மது குடிப்போர் மதுபானங்களை வாங்குவதற்காக இடைத்தேர்தல் நடைபெறாத பக்கத்துக்கு மாவட்டங்களுக்குச் சென்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியின் எல்லையான சிந்தாமணி விலக்கில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது புலியூர். இது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தது.
இரு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடை முன்பு நேற்று பிற்பகல்சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வயது வித்தியாசம் இன்றி மதுப்பிரியர்கள் வரிசையாக நின்றிருந்தனர்.
இக்கூட்டத்தைப் பார்த்து வாகனங்களில் சென்றவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பதாகக் கருதினர். பிறகுதான் மதுவாங்க இந்த வரிசை எனத் தெரிந்து வேதனையுடன் சென்றனர். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகமானது. மதுபானம் வாங்க முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தி மது குடிப்போரை வரிசையில் வரச் செய்தனர். தடியடியால் சிறிது நேரம் கடை மூடப்பட்டது. பின்னர் மீண்டும் கடை திறக்கப்பட்டு மது விற்பனை தடையில்லாமல் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT