Published : 25 Apr 2019 03:48 PM
Last Updated : 25 Apr 2019 03:48 PM
குழந்தைகளை கடத்தி 30 ஆண்டுகளாக விற்பனை செய்யும் பெண் செவிலியர் ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த செவிலியரைப்பிடித்து போலீஸார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தை இல்லாத ஒருவர் இதுகுறித்து விசாரிக்க குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனைச் செய்யும் ஒரு பெண் செவிலியரின் தொடர்பு கிடைக்க அவரிடம் பேசியுள்ளார். அவர் கூறிய விபரங்கள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏதோ பொம்மைக்கடையில் பொம்மை விற்பதுபோன்று இந்த தரத்துக்கு இவ்வளவு விலை என பேசுகிறார் அந்தப்பெண், இதனால் மிரண்டுப்போன அவர் அந்த ஆடியோவை வலைதளத்தில் கசியவிட அது பெரும் வைரலாகி உள்ளது.
இது சம்பந்தமாக போலீஸார் கவனத்திற்கு வர அந்த செவிலியரை விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் வைரலானதை அடுத்து இதுகுறித்து புகார் அளிக்க சுகாதாரத்துறைச் செயலர் பியூலா ராஜேஷ் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ள அடிப்படையில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆடியோவில் உள்ள குரலுக்கு சொந்தக்காரப்பெண், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 10 ஆண்டு காலம் செவிலியராக பணியாற்றி 2 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற அமுதா என்பவர் என்றும், இவர் தரகராக இருந்து குழந்தைகளை வாங்கி, விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
அந்தப்பெண் பேசும் ஆடியோ பதிவில்:
“30 வருடமா செய்கிறேன் ஆண்டவன் புண்ணியத்தில் எந்தப்பிரச்சினையும் வந்ததில்லை. பெண் குழந்தை என்றால் ரூ.2.70 வரைக்கும் பண்ணுங்க. வெள்ளையா 3 கிலோ எடைவரை இருந்தால் 3 லட்சம்வரை பண்ணலாம்.
ஆண்குழந்தை கருப்பாக இருந்தால் 3 லட்சம்வரை முடித்து தருகிறேன். வெள்ளையா அழகா, கொழுகொழுன்னு அமுல்பேபி மாதிரி இருந்தால் 4 லட்சம் வரை 4.25 லட்சம் வரை பண்ணுவாங்க” என்கிறார்.
இந்த பெண்ணின் பின்னணியில் உள்ள கும்பல் வெளிமாநிலங்களிலிருந்தும் குழந்தைகளை திருடிவந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தவிர உள்ளூரில் குழந்தைகளை திருடுவதும் அதை தொண்டு நிறுவனங்கள் மூலம் குழந்தைகள் இல்லா தம்பதிகளுக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது.
30 ஆண்டுகளாக ஒரு பெண் தனியாக தொழில் செய்கிறேன் என்கிறார் என்றால் அவருக்கு பின்னணியில் இயங்கும் கும்பல், தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் இயங்கும் அமைப்புகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும் என்கிற கருத்து எழுந்துள்ளது.
குழந்தைகள் கடத்தல் என்பது அனைவரும் மிகக்கவனமாக கவனித்து நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் இதுபோன்ற விவகாரம் பொம்மைகளை விற்பதுபோன்று சர்வ சாதாரணமாக நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை 2.5 லட்ச ரூபாய் முதல் 4.5 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யும் இவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக 70 ஆயிரம் ரூபாய்வரை கொடுத்தால் பிறப்புச் சான்றிதழே வாங்கிக்கொடுத்து விடுவார்கள் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் மிகப்பெரும் நெட்வர்க்கே இதன் பின்னணியில் இயங்குவது தெளிவாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT