Published : 21 Apr 2019 03:58 PM
Last Updated : 21 Apr 2019 03:58 PM

‘பிடிகாசை’ பெறுவதில் கூட்டநெரிசல்: திருச்சி அருகே கோயில் திருவிழாவில் 7 பேர் பலி

திருச்சி மாவட்டம் முத்தையம்பாளையம் கோயில் திருவிழாவில் பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் ஒருவரையொருவர் நெருக்கி தள்ளியதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் பகுதியில் கருப்பசாமி கோயில் உள்ளது.  சித்ரா பவுர்ணமியையொட்டி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி இங்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.

திருச்சி மட்டுமின்றி பிற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்தையம்பாளையம் வருகை தருவர்.

இன்றும் கோயில் திருவிழாவில் கருப்பசாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.  இதன்பின் பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது காசை பெறுவதற்காக க்கள் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு செல்ல முற்பட்டனர்.  இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் 4 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 7 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் லட்சுமிகாந்தன், ராஜவேல், கந்தையா, சாந்தி, ராமர், பூங்காவனம், வள்ளி என தெரிய வந்துள்ளது. இவர்கள் கரூர், கடலூர், சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x