Published : 13 Apr 2019 10:34 AM
Last Updated : 13 Apr 2019 10:34 AM
மறைந்த திமுக தலைவர் மு.கரு ணாநிதி மற்றும் மு.க.அழகிரியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட் பாளர் பிரச்சாரம் செய்வது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மலை மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வழக்கறிஞர் ரகுநாதன் போட்டியிடுகிறார். இவர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகன் மு.க.அழகிரியின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்கிறார். இதனால், திமுக தரப்பில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வேட்பாளர் ரகுநாதன் கூறும்போது, “திருவண்ணாமலை எனது சொந்த ஊராகும். தற்போது, சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லப்பாக்கத்தில் வசிக்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். திமுகவில் கடந்த 20 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன்.
நான், மு.க.அழகிரியின் விசுவாசி. கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு திமுக தலைமையிடம் விருப்ப மனு கொடுத்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கட்சியில் ஒரு சிலரின் ஆதிக்கம் உள்ளது. அதனால், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி மற்றும் மு.க.அழகிரியின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன் படுத்துகிறேன். பிரச்சாரத்துக்கு செல்லும் போது மக்களிடம் வரவேற்பு உள்ளது” என்றார்.
இது குறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “மு.க.அழகிரியின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதால் எங்கள் (திமுக) வேட்பாளருக்கு பாதிப்பு இல்லை. அவரை நாங்கள் பொருட்படுத்தவில்லை.
அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன், அவருக்கு நெருக்கடி கொடுக்க போகிறோம். தலைவர் ஸ்டாலினின் பிரச் சாரம், எங்களது தேர்தல் அறிக்கை மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உள்ள மக்களின் கோபம் ஆகியவை திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு வெற்றியை தேடித் தரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT