Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM
மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ கண்ணப் பனின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து கொண்டே ‘ஸ்லீப்பர் செல்’ போன்று தேர்தல் வியூகங்களை வெளியே கசியவிடுவதாகக் கூறப்படுகிறது. இத னால் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரான 1991-1996 கால கட்டத்தில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜ கண் ணப்பன். கட்சியிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். பின்னர் அக் கட்சியில் இருந்து விலகி 2000-ம் ஆண் டில் மக்கள் தமிழ் தேசம் கட்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். இளையான்குடியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அவர், 2009-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் சேர்ந்தார். அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், தோல்வி அடைந்தார். அதன்பி ன் 2011-ம் ஆண்டு திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட ராஜ கண்ணப்பனுக்கு ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். அதிலும் தோல்வியடைந்தார். தொடர் தோல்விகளால் கட்சியில் அவருக்கிருந்த முக்கியத்துவும் குறைந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவு க்குப் பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் சேர்ந்தார். தற்போதைய மக்களவைத் தேர்தலில் சிவகங்கை அல்லது ராமநா தபுரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அவர், உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட் டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆனால், அதைப் பற்றி கவலைப்படாத அதிமுகவினர், "ராஜ கண்ணப்பனுக்கு முன்பு யாதவர் சமூகத்தின் ஆதரவு பலமாக இருந்ததாகவும், தற்போது அந்தளவுக்குச் செல்வாக்கு இல்லை என்பதால் அதிமுக தலைமை அவருக்கு ‘சீட்’ தரவில்லை. எனவே, அவர் இப்போது செய்துவரும் பிரச்சாரம் எடுபடாது" என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது அதிமுகவில் உள்ள ராஜ கண்ணப்பனின் ஆதரவாளர்கள் ‘ஸ்லீப்பர் செல்கள்’ போல் செயல்பட்டு, அக்கட்சியில் மேற்கொள்ளப்படும் தேர்தல் வியூகங்களை அவரிடம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்குமோ என அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கூறியதாவது: அதிமுக வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவோடு, ராஜ கண்ணப்பனின் ஆதரவாளர்கள், கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு வேலை செய்கின்றனர். அவர்கள் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நடவடிக்கைகளை, ராஜ கண்ணப்பனுக்கு தெரிவிக்கின்றனர். அதை அவர் திமுகவிடம் சொல்கிறார்.
இதற்கு முன்பு ஜெயலலிதா இருந்தபோது தேர்தலில் ‘சீட்’ கிடைக்காத நிர்வாகிகள், பிரச்சார வேலைகளைப் பார்க்காமல் விலகி இருந்தால்கூட, எதிர் முகாமுக்கு உளவாளிகளாக செயல்பட மாட்டார்கள். ஆனால், தற்போது கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலை பார்க்கின்றனர். இதுகுறித்து வேட் பாளர்களுக்குத் தெரிந்தாலும், நேரடியாக அவர்களைத் தட்டிக்கேட்டால் கூடுதல் பலவீனமாகிவிடும் என்பதால் அவர்களை ஒதுக்கி வைக்கவும் முடியாமல், பக்கத்தில் வைத்துக் கொண்டு தேர்தல் வியூகங்களை அமைக்கவும் முடியாமல் தவிக்கின்றனர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT