Published : 11 Apr 2019 08:51 PM
Last Updated : 11 Apr 2019 08:51 PM
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் வாக்களிக்க வசதியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாக்குச்சாவடியை அமைக்கிறது தேர்தல் ஆணையம். இதுகுறித்த விழிப்புணர்வுப் பயிற்சியும் நேற்று அளிக்கப்பட்டது.
தமிழக அளவிலேயே மனநல மருத்துவமனையால் அடையாளம் பெற்ற பகுதி சென்னையிலிருக்கும் கீழ்ப்பாக்கம். 17-ம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டது இந்த மனநல மருத்துவமனை.
அயனாவரத்தில் அமைந்துள்ள மனநல மருத்துவமனை மற்றும் காப்பகம்1794-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கப்பட்டது. 225 ஆண்டுகள் பழமையானது. இந்த மருத்துவமனை மற்றும் மனநலக் காப்பகம் ஆசிய கண்டத்திலேயே மிகவும் பெரியதாகும். இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மனநலக் காப்பகம் என்ற கூடுதல் சிறப்பையும் பெற்றது.
இந்த மருத்துவமனையில் இயற்கை முறையில் காய்கறிகள், பழங்கள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. இந்தப் பணியில் சிகிச்சை பெறும் மனநோயாளிகளைப் பங்கெடுக்க வைத்து அவர்களுக்கு தொழில் முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பேக்கரி தொழில், கேன்டீன் பணி போன்றவை தொழில்வழி சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் மேற்பார்வையில் மனநல சிகிச்சையில் தேர்ச்சியடையும் பிணியாளர்களுக்கு மறுவாழ்வு மைய சிகிச்சை முறைகளில், பிரெட் தயாரித்தல், தோட்டக்கலை, டெய்லரிங், பொம்மை தயாரித்தல், தச்சுத் தொழில் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 900 பேரில் 192 பேர் மிகச்சிறந்த அளவில் இயல்பான நிலைக்குத் திரும்பியுள்ளனர். இவர்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் முதன்முறையாக முயற்சி எடுத்துள்ளது.
வாக்களிக்கவேண்டும் என்றால் அவர்கள் வெளியே சென்று வாக்களிக்க முடியாது. மற்றொரு விஷயம் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டவும், பயிற்சியும் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் நேற்று அவர்களுக்கான வாக்களிக்கும் பயிற்சியை அளித்தது.
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தங்கள் குழுவினருடன் அரசு மனநலக் காப்பகத்துக்குச் சென்றனர். அங்குள்ள 192 மனநலப் பிணியாளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்களிக்கும் முறையை வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் பயிற்சி அளித்தனர். அவர்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்குப் பதிலளித்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் தேர்தலன்று வாக்களிக்க மனநல மருத்துவமனையின் உள்ளேயே வாக்குச்சாவடி அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவலைத் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதிய முயற்சியை மருத்துவமனையின் டீன் உள்ளிட்ட மருத்துவர்கள் பொதுமக்கள் வரவேற்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ''சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல் முறையாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் வாக்களிக்கும் தகுதியுடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்தனர்.
அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்களிக்கவும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT