Published : 07 Apr 2019 12:45 PM
Last Updated : 07 Apr 2019 12:45 PM
கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாகப் பேசியிருந்தால் தவறுதான் என்று ஸ்டாலின் கூறியுள்ளதற்கு 18ம் தேதி ஒரு பாரதப்போர் ஆரம்பம். தீயவர்கள் அழியும் காலம் நெருங்கி விட்டது என்று எஸ்.வி. சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்துக் கடவுளான கிருஷ்ணரை பொள்ளாச்சி சமபவத்தோடு ஒப்பிட்டுப் பேசியதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தன. நேற்று முன்தினம் திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார் .
அப்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கிருஷ்ணரைப் பற்றி அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “கி.வீரமணி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு அல்ல அது. திராவிடர் கழகத் தலைமை அலுவலகமான பெரியார் திடலில் பேசியது. அதுவும் கிருஷ்ணரைக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி பேசவில்லை. சில உதாரணங்களுடன் பேசியிருக்கிறார். அதனை, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளும், சில ஊடகங்களும் தவறான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல செய்திருக்கும் சதி இது. அது உண்மை இல்லை. அப்படி, உண்மையாக இருந்திருந்தால் அது தவறுதான் என்பது என்னுடைய கருத்து” என்று கூறியிருந்தார்.
ஸ்டாலினின் இந்தப் பதிலைக் குறிப்பிட்டு எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல. 18-ம் தேதி ஒரு பாரதப்போர் ஆரம்பம். தீயவர்கள் அழியும் காலம் நெருங்கி விட்டது. COUNTDOWN STARTS” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT