Published : 29 Mar 2019 10:43 AM
Last Updated : 29 Mar 2019 10:43 AM
இன்று காலை நடைபயிற்சி மூலம் மதுரை வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற ஸ்டாலினுடன் செல்பி எடுத்த இளைஞர் அழகிரி உருவம் பொறித்த பனியனை அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பரப்பப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வரும் மு.க. ஸ்டாலின் நேற்றிரவு மதுரையில் தங்கினார். அவர் இன்று அதிகாலையில் மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனுடன் நடை பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மதுரை மார்க்கெட் என பல பகுதிகளில் அவர் நடைபயிற்சி செய்து கொண்டே பொதுமக்கள், தொழிலாளிகள், காய்கறி வியாபாரிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருடன் பேசி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பலரும் மு.க.ஸ்டாலினுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஸ்டாலின் சிரித்தப்படியே நின்று புகைப்படமெடுக்க ஒத்துழைத்தார். அப்போது ஸ்டாலின் அணிந்திருந்த அதே மஞ்சள் கலர் பனியனுடன் ஒரு இளைஞர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
அவருடனும் ஸ்டாலின் சிரித்தபடி செல்பி எடுக்க ஒத்துழைத்தார். செல்போன் எடுத்த இளைஞர் பனியனில் மு.க.அழகிரியின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை ஸ்டாலின் கவனித்தாரா? என்பது தெரியாது. ஆனால் இந்த படம் திமுகவினர் எடுத்த மற்ற படங்களுடன் வெளியானது.
இந்த படத்தில் உள்ள முக அழகிரி உருவம் பொறித்த பனியன் அணிந்த இளைஞருடன் ஸ்டாலின் செல்பி எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் நகைச்சுவையாக வைரல் ஆகிறது.
‘பிச்சர் ஆப் த டே’ ‘உஷார் ஆப் த டே’ என்றெல்லாம் புகைப்படத்திற்கு தலைப்பிட்டு சமூகவலைதளங்களில் நகைச்சுவையாக பரப்பப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஒருபுறம், அழகிரி படம் பொறித்த பனியனுடன் ஸ்டாலின் செல்பி எடுத்த புகைப்படம் வெளியாகும் அதேவேளையில், மதுரை திமுகவினர் இடையே அண்ணன் அழகிரி விரைவில் திமுகவுக்காக வாய்ஸ் கொடுக்க உள்ளார் என்ற தகவல் சந்தோஷத்துடன் பேசப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT