Published : 29 Mar 2019 06:05 AM
Last Updated : 29 Mar 2019 06:05 AM

‘‘வாக்குகளை விற்காதீர்கள்’’ என்று கூறி  மின்சார ரயில்களில் பிரச்சாரம் செய்யும் கல்லூரி மாணவன்: பொதுமக்கள், பயணிகள் பாராட்டு

கல்லூரி மாணவர் ஒருவர் தனிநப ராக, வாக்குரிமை குறித்தும், அதன் அவசியத்தை வலியுறுத்தியும் மின்சார ரயில்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகில் உள்ள பெளாத் தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.கணேஷ்குமார்(21). சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி பிரிவில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யூடியூப் மூலம் இவர் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொண்டார்.

ஆனால் மக்களிடம் அது பெரிய அளவில் சென்றடை யவில்லை. இதைத்தொடர்ந்து மக்களை நேரடியாக சந்தித்து அவர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதுதொடர்பாக என்.கணேஷ் குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

நம் நாட்டில் வாக்குரிமை குறித்தும், விலை மதிக்க முடியாத அதன் சக்தி குறித்தும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு சென்று பேச முடிவெடுத்தேன். முதலில் மாநகர பேருந்துகளில் பேச முயன்றேன். ஆனால் நடத்துநர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு வழியாக இப்போது எனது நண்பர் ஜெயசுதன் உதவியுடன் மின்சார ரயில்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற் படுத்தாத வகையில் உரிமையோடு அவர்களின் அருகில் நின்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசி வருகிறேன்.

கட்சியை பார்த்து வாக்களிப் பதைவிட, உங்கள் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் இணையதளங்களில் தேடினா லேயே அவர்கள் பற்றிய முழு தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்த பிறகு வாக் களியுங்கள் என ஒவ்வொரு இடத் திலும் ஓரிரு நிமிடங்கள் பேசி வருகிறேன்.

இதனால், ஒருவர் மாறி னால்கூட எனக்கு பெரிய வெற்றி தான். தேர்தல் நாள் வரையில் நான் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சாரங்களை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக ரயில் பயணிகள் ராஜேஷ், தீபக்குமார், ராஜேஸ்வரி ஆகியோர் கூறும்போது, “மக்கள் பிரச்சினையை சுட்டிக்காட்டியும், அரசியல் கட்சிகளை விமர்சித்தும் சில அமைப்புகள் தங்களது பிரச்சார பணிக்கு எனக் கூறி உண்டியல் மூலம் நிதி வசூலிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இந்த கல்லூரி மாணவர் எந்தக் கட்சியையும் சாராமல், வாக்குரிமையின் முக்கியத்துவத்தை மட்டுமே முன்னிறுத்தி, தனது குரல் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது போன்ற இளைஞர்களை வரவேற்க வேண்டிய நமது கடமை’’ என்றனர்.எந்தக் கட்சியையும் சாராமல், வாக்குரிமையின் முக்கியத்துவத்தை மட்டுமே முன்னிறுத்தி, தனது குரல் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது போன்ற இளைஞர்களை வரவேற்க வேண்டிய நமது கடமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x