Published : 26 Mar 2019 09:13 PM
Last Updated : 26 Mar 2019 09:13 PM

சாதிக்பாட்சா வழக்கு விசாரணை என பூச்சாண்டி காட்டவேண்டாம்: முதல்வர் பழனிசாமிக்கு திமுக பதில்

சாதிக்பாட்சா வழக்கு என மிரட்டவேண்டாம், திமுக எத்தனையோ வழக்குகளைப்பார்த்து வென்று வந்துள்ளது என எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இன்று வெளியிட்ட அறிக்கை:

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய நாள் முதல் அவர் செல்லும் இடமெங்கும் மக்கள் அவருக்கு அளிக்கும் ஆதரவும், வரவேற்பையும் கண்டு தாங்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி தான் ஒரு முதலமைச்சர் என்பதையும் மறந்து பொறுப்பற்ற முறையில் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

ஸ்டாலின், ஒவ்வொரு கூட்டத்திலும் எடப்பாடி மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் அடுக்கடுக்கான ஊழல் புகார்களை ஆதாரத்தோடு நிரூபிக்கும் வகையில் வைக்கும் வாதங்களுக்கு பதில் சொல்ல துப்பற்ற, திராணியற்ற எடப்பாடி பழனிசாமி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பேசி வருகிறார்.

கொடநாட்டில் நடைபெற்ற கொலை குறித்து இவர்மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை தர இயலாத எடப்பாடி, ஏற்கனவே சாதிக்பாட்சா வழக்கு சிபிஐயால் (ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே) தீவிரமாக விசாரிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்ப்ட்டு இருக்கிறது என்பதுகூட தெரியாத முதல்வராக உள்ளது வேடிக்கையாக உள்ளது.

ஏதோ இவர் ஜெயலலிதாவைவிட தன்னை புத்திசாலியாக நினைத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் சாதிக்பாட்ஷா மரணத்தை குறித்து விசாரணை நடத்துவேன் என்று சொல்கிறார். விசாரணை கமிஷன்களை கண்டு எந்த காலத்திலும் அஞ்சாத ஒரு இயக்கம் திமுக என்பதை எடப்பாடிக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

இவர் விசாரணை நடத்தும் முன்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில், இவர்மீது சுமார் ரூபாய் 3,500 கோடி அளவுக்கு ஊழலுக்கு உரிய முகாந்திரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், வீரம் பேசும் எடப்பாடி ஓடோடிச் சென்று அதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்.

இதிலிருந்தே இவர் எவ்வளவு பெரிய யோக்கியர் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. “யோக்கியன் வருகிறான்... சொம்பை எடுத்து உள்ளே வை” என்று சொல்வதைப் போல, இவர் செல்லும் இடமெல்லாம் காலியான சாலைகளையும், மரங்களையும் பார்த்துக் கொண்டு செல்வதைப் பார்த்தால், இந்த பழமொழி இவருக்குப் பொருத்தமானது எனத் தோன்றுகிறது.

எடப்பாடியும் அவரது சகாக்களும், எப்படிப்பட்டவர்கள் என்பதை திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் நீதிமன்றம் கூறியிருக்கும் தீர்ப்பை பார்த்தால் தெரியும். இதுவரை எடப்பாடியின் கூட்டம் ஊரை அடித்து உலையில் போடும் ஊழல் பேர்வழிகள், என்ற பெருமைக்குரியவர்களாக இருந்தவர்களை மோசடி பேர் வழி என மேலும் ஒரு பட்டையத்தோடு பவனி வருகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, சாதிக்பாட்ஷா மரணம் குறித்து விசாரிக்க போவதாக மிரட்டல் விடுவதைக் கண்டு திமுக ஒருபோதும் அஞ்சவும் இல்லை, இதுவரை திமுக.மீது போடப்பட்ட பொய் வழக்குகளை, அத்தனை வழக்கிலும் வென்று காட்டிய பெருமை திமுகவிற்கு மட்டுமே உண்டு. எந்த விசாரணை கமிஷனையும் தி.மு.க. சந்திக்க தயார்”

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x