Published : 26 Mar 2019 05:59 PM
Last Updated : 26 Mar 2019 05:59 PM
தினகரனால் அதிமுகவுக்குப் பின்னடைவு என்பது கிடையவே கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், தேர்தலைக் கருத்தில் கொண்டு அமமுகவுக்கு பொதுச்சின்னத்தை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் அதிமுகவின் வாக்குகளை தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கணிசமாகப் பிரித்துவிடும் என்று கூறப்படுகிறது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தினகரனுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கப்படுவது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார் ஜெயக்குமார். அப்போது அவர்,'' தினகரனின் வழக்கு எந்த வகையிலும் எங்களுக்குப் பின்னடைவாக இருக்காது.
அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் இழைத்தவர்களின் நிலை அந்தோ பரிதாபத்தில்தான் முடியும். இதைக் கடந்த கால வரலாறுகள் உணர்த்தி இருக்கின்றன. துரோகச் செயலைச் செய்த இவர்களுக்கும் அதே நிலைதான் ஏற்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT