Published : 25 Mar 2019 03:58 PM
Last Updated : 25 Mar 2019 03:58 PM

செந்தில் பாலாஜியின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய டிஎஸ்பி: கரூர் வேட்புமனுத் தாக்கலில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிப்பு

கரூர் வேட்பமனுத் தாக்கலுக்குச் சென்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு அளித்த நேரத்தைக் கடந்து காக்கவைத்து தம்பிதுரைக்கு முன்னுரிமை கொடுத்ததை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார் டிஎஸ்பி. இதனால் கொந்தளித்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி போட்டியிடுகிறார். இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய முடிவெடுத்திருந்தார். அவருடன் கூட்டணி கட்சியின் கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் என்கிற முறையிலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பிரமுகர்கள் உடன் சென்றனர்.

கரூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் இன்று அதிமுக வேட்பாளர் தம்பிதுரையும் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். அவருக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய பகல் 11 மணி முதல் 12 மணி  வரையிலும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பகல் 12 மணி முதல் 1 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வேட்பாளர் ஜோதிமணி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்ய காத்திருந்தார். அதிமுக வேட்பாளர் தம்பிதுரை காலை 11 மணிக்கே ஆட்சியர் அலுவலகம் வந்து அறையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் பகல் 12.30 மணி ஆகியும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை ஆட்சியர் அறையில் இருந்து வரவில்லை. இதனால் வேட்பாளர் ஜோதிமணி,  செந்தில் பாலாஜி ஆகியோர் நேரம் ஆகிறது எனக் கேட்டனர். உள்ளே தம்பிதுரை இருக்கிறார் என போலீஸார் அவர்களை அனுமதிக்கவில்லை.

எவ்வளவு நேரம் காத்திருப்பது எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் மனுத்தாக்கல் செய்ய வேண்டாமா? மணி 12.30 ஆகிவிட்டது, அவருக்கு ஏன் கூடுதல் நேரம் ஒதுக்குகிறீர்கள், நான் தேர்தல் அதிகாரியிடமே கேட்கிறேன் என செந்தில் பாலாஜி உள்ளே செல்ல முயல் அங்கு பணியில்  இருந்த குளித்தலை டிஎஸ்பி சுகுமார், செந்தில் பாலாஜியைத் தடுத்தார்.

ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜியை நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டார். இதனால் செந்தில் பாலாஜி தடுமாறினார். உடன் வந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்தனர். உங்கள் மீது வழக்குப்போடுவேன் என செந்தில் பாலாஜி ஆத்திரத்துடன் டிஎஸ்பியிடம் வாக்குவாதம் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட வேட்பாளர் ஜோதிமணி நானும் வேட்பாளர், தம்பிதுரையும் வேட்பாளர்தான். அவர் ஒன்றும் எம்.பி. அல்ல அதைப் புரிந்துகொள்ளுங்கள் என டிஎஸ்பியிடம் வாக்குவாதம் செய்தார். எங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ள அவர் யார் எனக் கேட்டார்.

பொறுங்கம்மா? அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் நான் கேட்டுவிட்டு வருகிறேன் என டிஎஸ்பி பதிலளித்தார். முன்னாள் அமைச்சர் என்றும் பாராமல் செந்தில் பாலாஜியை நெஞ்சில் கை வைத்துத் தள்ளியதை அங்குள்ள ஒருவர் செல்போனில் படம் பிடித்து கசியவிட அது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x