Published : 24 Mar 2019 03:25 PM
Last Updated : 24 Mar 2019 03:25 PM

செல்ஃபி எடுக்க குழந்தைகளை அழைத்து வந்து தொல்லை தரும் போலீஸ் அதிகாரிகள்: காவல் ஆணையரிடம் தோனி புகார்?

ஹோட்டலில் தங்கியிருக்கும் தன்னிடம் செல்ஃபி எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து தொல்லை தருவதாக சிஎஸ்கே கேப்டன் தோனி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடங்கி விட்டது. சென்னையில் ஆர்சிபி அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே முதல் போட்டி நேற்று நடந்தது. இதில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

இந்திய அளவில் ஐபிஎல் என்றாலே தோனி என கூறும் அளவிற்கு பெரிய அளவில் அவர் விளம்பரப்படுத்தப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

மறுபுறம் ரசிகர்களும் அவரைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்ததாகக் கூறப்படுகிறது. தோனி தனது அணி மேலாளர் ரசூல் மூலம் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறு தரும் அளவில் காவல் அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து செல்ஃபி எடுக்கவும் போட்டோ எடுக்கவும்  நிற்பதாகவும் இது தனக்கு மிகுந்த இடைஞ்சலை உருவாக்கியுள்ளதாகவும் தோனி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எரிச்சல் ஊட்டும் வகையில் தனது தனிப்பட்ட சுதந்திரத்தைத் தடுக்கும் வகையில் இது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்றும் தோனி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்தப் புகார் காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அது தெற்கு மண்டல இணை ஆணையர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தோனி சாதாரணமாக அனைவருடனும் பழகக்கூடியவர். சமீபகாலமாக மைதானங்களில் ரசிகர்கள் அவரைக் காணவும், அவரிடம் கைகுலுக்கவும் வரும்போது விளையாட்டாக அவர்களிடம் சிக்காமல் ஓடுவார்.

அவ்வாறு சாதாரணமாக உள்ள தோனியின் சுதந்திரம் பாதிக்கப்படும் அளவில் அதிகாரிகள் செயல்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x