Published : 23 Mar 2019 09:49 AM
Last Updated : 23 Mar 2019 09:49 AM

அதிமுகவுக்கு சவுகிதார் மோடிதான்: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

எடப்பாடி அரசின் ஊழல்களுக்கு, அதிமுகவுக்கும் சவுகிகார் மோடிதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் தேசிய , மாநில கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், ஐஜேகே, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். தன்னுடைய ஒவ்வொரு பொதுக்கூட்டப் பேச்சிலும் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கும் எதிராக கடுமையான கண்டனங்களையும், பாஜக அரசின் தோல்விகளை பட்டியலிட்டு பேசி திணறடித்து வருகிறார். பணமதிப்பிழப்பு, பொருளாதார வளர்ச்சிக் குறைவு, வேலையின்மை, ரஃபேல் ஊழல் உள்ளிட்ட விஷயங்களைப் பேசி மோடி அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திணறடித்து வருகிறார்

தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தபோதுகூட, காவிரிபிரச்சினை, கஜா புயல் ஆகியவற்றில் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து கறுப்புச்சட்டை அணிந்து எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால், தமிழகத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி ட்விட்டரில் சவுதிகதார் நரேந்திர மோடி எனும் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார். அதாவது நானும்கூட காவலன் என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பின், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தங்களின் பெயருக்கு முன் சவுகிதார்(காவலாளி) என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் நடக்கும் ஊழல், சமூகக் கொடுமைகளுக்கு எதிராக காவலாளியாக செயல்படுவேன் என்று பிரதமர் மோடி கூறியதை பாஜகவில் உள்ள மற்ற தலைவர்கள் முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சவுகிதார் என்ற வார்த்தையை குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி அவர்களை இனி சவுகிதார் மோடி என அழைக்க வேண்டுமாம்!

ஆம், அவர் சவுகிதார்தான்.!

மதவாத தீய சக்திகளுக்கு,  எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்களுக்கு, குட்கா ஊழலுக்கு, அதிமுக என்ற மைனாரிட்டி அரசுக்கு, மக்கள் விரோத தமிழக அரசுக்கு அவர்தான் சவுகிதார்

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x