Last Updated : 23 Mar, 2019 09:38 AM

 

Published : 23 Mar 2019 09:38 AM
Last Updated : 23 Mar 2019 09:38 AM

மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனை கட்டாயம் தோற்கடிப்பேன்: எஸ்டிபிஐ வேட்பாளர் தெஹ்லான் பாகவி கருத்து

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை கட்டாயம் தோற்கடிப்பேன் என்று எஸ்டிபிஐ (சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

அதிமுக - பாஜக கூட்டணியை நீங்கள் எதிர்ப்பது ஏன்?

தமிழக உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. அதனால்தான் இந்த கூட்டணியை எதிர்க்கிறோம்.

டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைக்க என்ன காரணம்?

திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் மறை வால் தமிழக அரசியலில் வெற் றிடம் ஏற்பட்டுள்ளது. அதை நிரப்பும் ஆளுமை டிடிவி தினகரனிடம் உள்ளது. மத்திய, மாநில அரசுகளை கடுமையாக எதிர்ப்பதன் மூலம் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். எனவே, அமமுகவுடன் கரம் கோர்த்துள்ளோம்.

அமமுக கூட்டணியில் உங்களுக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த அளவு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதுகிறீர்கள்?

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2 முறை வெற்றி பெற்றும், சொல்லிக்கொள்ளும்படி எதையும் செய்யவில்லை.

இதனால் அவர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இங்கு வாக்கு வங்கி இல்லாத பாமகவுக்கு இத்தொகுதியை விட் டுக்கொடுத்ததால் அதிமுகவினரும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதேநேரம், இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் இருக்கிறது.

மக்கள் பிரச்சினைகளுக்காக நாங்கள் குரல் கொடுப்பதால், அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் இருக்கிறது. இத்தொகுதியில் தயாநிதி மாறனுக்கும் எனக்கும் தான் நேரடி போட்டி. நிச்சயம் அவரை தோற்கடிப்பேன்.

திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிம்கூட இல்லாதது பற்றி?

இரு கட்சிகளும் முஸ்லிம்களை புறக்கணித்துள்ளன. இது வருந்தத் தக்கது. ஆனால், டிடிவி தினகரன் எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இத்தேர்தலில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறை திமுக, அதிமுக கூட்டணிகளில் உள்ள முஸ்லிம் கட்சிகள், அந்த கூட்டணியை ஆதரிக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கு கட்டாயம் இருக்கும்.

அதனால், அவர்கள் எனக்கு தடையாக இருப்பார்கள் என்று கருதவில்லை.

இவ்வாறு தெஹ்லான் பாகவி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x