Last Updated : 23 Mar, 2019 08:52 AM

 

Published : 23 Mar 2019 08:52 AM
Last Updated : 23 Mar 2019 08:52 AM

ஆட்சியாளர்கள் மீதான கோபம்தான் அரசியலுக்கு தள்ளியது: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் கருத்து

ஆட்சியாளர்கள் மீதான கோபமும், சமூகத்தின் மீதான அக்கறையும்தான் என்னை அரசியலுக்கு தள்ளியது என்று மக்கள் நீதி மய்யத்தின் மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் மத்திய சென்னை வேட்பாளராக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் அறிவிக்கப்பட்டுள்ளார். ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், இப்போது திடீரென அரசியலுக்கு வந்ததற்கு என்ன காரணம்?

எனக்கும் குடும்பம், குழந்தை இருக்கிறது அல்லவா. அதுவும் ஒரு காரணம். மற்றொன்று, குண்டும் குழியும் இல்லாத சாலைகளையே இன்று பார்க்க முடிவதில்லை. இவ்வாறு ஆட்சியாளர்களின் ஒவ்வொரு செயல்பாடு மீதும் கோபம் வருகிறது. அதன் வெளிப்பாடும், சமூக அக்கறையும்தான் அரசியலுக்கு வருவதற்கு காரணம்.

எத்தனையோ கட்சிகள் இருக்கும்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தது ஏன்?

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகின்றன. அவர்கள் நல்லாட்சி நடத்தி இருந்தால் நாம் ஏன் அரசியலுக்கு வரப்போகிறோம். இந்த சூழலில், நேர்மையான கட்சியாக மக்கள் நீதி மய்யம் உதயமானதால், அதில் இணைந்துள்ளேன்.

மத்திய சென்னை தொகுதியை ஏன் தேர்வு செய்துள்ளீர்கள்?

கட்சியின் சென்னை மண்டல பொறுப்பாளராக இருந்தேன். சென்னையில் ஒரு தொகுதி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். எது கொடுத்தாலும் போட்டியிடலாம் என்று நினைத்திருந்தேன். மத்திய சென்னை தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று நிறைய பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவின் அடிப்படையில், மத்திய சென்னை எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக ஆட்சி, மாநில அதிமுக ஆட்சியின் செயல்பாடு குறித்து..

பாசிச கட்சிகள் பற்றி என்ன சொல்வது. கருத்து சொல்லாமல் தவிர்க்கிறேன் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. ஓரவஞ்சனையோடு செயல்படுபவர்களை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. தவிர, அடுத்தவர்களைப் பற்றி குறைசொல்வதை விட, நாங்கள் என்ன செய்வோம் என்று மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் கட்சியாகதான் நாங்கள் இருக்கிறோம். யாரையும் குறை சொல்லும் கட்சியாக இருக்க மாட்டோம்.

எதை முன்வைத்து பிரச்சாரம் செய்வீர்கள்?

எல்லா துறைகளிலும் பெண்களுக்கு சம்பள விகிதம் குறைவாகவே இருக்கிறது. ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும், மூன்றாம் பாலினத்தினவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். சமுதாயத்தில் பெண்களுக்கான சம வாய்ப்பு, மத்திய சென்னை சார்ந்த மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வேன். ஒரு பெண் என்பதால், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அமர்ந்து வாக்கு கேட்க முடிகிறது.

உங்களுக்கு ஆதரவாக கணவர் நாசரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா?

வரும் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். அதன் பிறகு, என் கணவர் நாசர் எனக்கு ஆதரவாக நிச்சயம் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். அவர் மட்டுமின்றி, வரத் தயாராக இருக்கும் மற்ற நடிகர்களையும் இணைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் இறங்குவேன்.

உங்களது பிரதமர் வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, வரும்போது, பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மக்கள் நீதி மய்யத்துக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்போது, பயன்படுத்துவதில் என்ன தவறு. தெற்கை பார்த்து வடக்கு கற்றுக்கொள்ளட்டும்.

மத்திய சென்னையில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

மக்கள் தங்களது உரிமைகளுக்காக கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். திமுக, அதிமுக என்ற பிம்பம் எல்லாம் உடைந்துவிட்டது. இந்த சூழலில், புது மாணவியாக தேர்வுக்கு தயாராகி வருகிறேன். நன்கு உழைத்து, நம்பிக்கையோடு தேர்வு எழுதச் செல்வேன். நல்லபடியாக தேர்வு எழுதி வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் மாற்றம் வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x