Published : 21 Mar 2019 06:52 AM
Last Updated : 21 Mar 2019 06:52 AM

சேலத்தில் முதல்வர், தேனியில் ஓபிஎஸ், திருவாரூரில் ஸ்டாலின்: களைகட்டத் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. சேலத்தில் முதல்வர், தேனியில் ஓபிஎஸ், திருவாரூரில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தேர்தல்களம் களைகட்டத் தொடங்கியது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அதே நாளில் நடத்தப்படுகிறது. அதிமுக மற்றும் திமுகவில் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி உடன்பாடுகள் முடிந்து, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக, முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் இரவு சேலம் புறப்பட்டுச் சென்றார். சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் அதிமுக சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், சேலம் மக்களவை தொகுதி வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது, ‘‘மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதாதான். கருணாநிதி இருந்தவரைமு.க.ஸ்டாலின் செயல்தலைவராகத்தான் இருந்தார். தந்தையே அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அப்படியானால், நாட்டு மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்’’ என்று பேசினார்.

இதற்கிடையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதி வேட்பாளரும் தனது மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து, சோழவந்தான், பாலமேடு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘‘எந்தக் கட்சி, அமைப்பின் ஓட்டும் அதிமுகவுக்கு பாதகத்தை ஏற்படுத்தாது. அதிமுகவில் உட்கட்சி பூசல் இல்லை. ராஜகண்ணப்பன் பதவி கிடைக்காவிட்டால் மாற்று முகாமுக்குச் செல்வது வாடிக்கை. வாரிசுகளுக்கு ‘சீட்’ கொடுக்கப்பட்டதாக கூறுவதே தவறு. தகுதி அடிப்படையிலே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை, கருணாநிதி போட்டியிட்டு வென்ற, திருவாரூர் தொகுதியில், திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவருடன், திருவாரூரை உள்ளடக்கிய நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பிரச்சாரத்தின்போது, தேர்தல் அறிக்கையில் சிறு குறுவிவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளதை அறிவித்தார். மேலும், தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிய உதவிகள் குறித்தும் விளக்கினார். முதல்கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வரை பல தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்கிடையே மதிமுக, பாமக, தேமுதிக கட்சிகளும் விரைவில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x