Published : 20 Mar 2019 10:23 PM
Last Updated : 20 Mar 2019 10:23 PM

திமுகவில் இணைகிறார் கலைராஜன்?- நீக்கத்தின் பின்னணி

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதா காலத்திலிருந்தே சசிகலா குடும்பத்துடன் நெருக்கம் காட்டி வந்தவர் வி.பி.கலைராஜன். அதன் காரணமாகவே அவர் கட்சியில் மிகச் செல்வாக்குடன் இருந்து வந்தார். தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த அவர், பின்னர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார்.

தி. நகர் தொகுதியிலும் கடந்த தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜெயலலிதா இருந்தவரையில் ஓரங்கட்டப்பட்டிருந்த அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்த நிலையில் சசிகலா ஆதரவாளராக தொடர்ந்தார்.

ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வந்தநிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்த உடன் டிடிவி தினகரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். டிடிவி அணியில் கலைராஜன் இணைந்தார். அமமுகவில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக வி.பி.கலைராஜன் இயங்கி வந்தார்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வி.பி.கலைராஜன் டிடிவியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சமீபகாலமாக டிடிவி தினகரனுடன் கருத்து மாறுபாடு காரணமாக கட்சியில் இருந்து கட்சியின் செயல்பாடுகளில் இருந்து கலைராஜன் ஒதுங்கியிருந்தாகவும், அதே நேரம்  திமுகவில் நெருக்கம் காட்டிவந்ததாகவும் கூறப்படுகிறது.

வி.பி. கலைராஜன் திமுகவின் முக்கிய தலைவரை சமீபத்தில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. நாளை திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் இணைய உள்ளதாக ஒரு தகவல் திமுக வட்டாரத்தில் உலா வருகிறது.

இந்நிலையில் வி.பி கலைராஜன் திமுகவில் இணையும் தகவல் கசிந்ததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க டிடிவி முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  அவரை கட்சியின் அனைத்து மட்டத்திலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கி இன்று டிடிவி தினகரன் அறிவித்தார். திமுகவில் வி.பி.கலைராஜன் இணைய உள்ளதை அடுத்து இந்த முடிவு என அமமுக வட்டார தகவல் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x