Published : 20 Mar 2019 05:06 PM
Last Updated : 20 Mar 2019 05:06 PM

11 மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி

மாணவிகளை தவறாக வழிநடத்திய குற்றம்சாட்டப்பட்ட உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி  11 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு  ஜாமீனில் வெளியே வந்தார்.

அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகினர். மூவருக்கும் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. இதனால் முருகனும், கருப்பசாமியும் உச்ச நீதிமன்றத்தை அணுகி கடந்த மாதம் ஜாமீன் பெற்றனர்.

தனக்கும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் நிர்மலாதேவி மனு தாக்கல் செய்தார். இதில் அவருக்கு ஜாமீன் வழங்க கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நிர்மலா தேவிக்கு ஜாமீன்தாரர்களாக அவரது மூத்த அண்ணன் ரவி மற்றும் குடும்ப நண்பர் மாயாண்டி ஆகியோர் தலா ரூ.10 ஆயிரம் சொத்து மதிப்பு காட்டி, விருதுநகரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் பிணையம் வழங்கினர்.

அதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பத்திரிகைகளுக்கோ தனி நபர் மூலம் ஊடகங்களுக்கோ பேட்டி அளிக்கக் கூடாது, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளோடு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி நீதித்துறை நடுவர் மும்தாஜ் நேற்று உத்தரவிட்டார்.

ஜாமீன் உத்தரவு உடனடியாக மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) காலை  சிறையில் இருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x