Published : 19 Mar 2019 07:26 PM
Last Updated : 19 Mar 2019 07:26 PM

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலம் அடிப்படையில் இன்னொரு இளைஞரும் சிக்குகிறார்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஏற்கெனவே கைதானவர்கள் சிறையில் உள்ள நிலையில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒரு இளைஞர் சிக்குகிறார். மேலும் சில அந்தரங்க வீடியோக்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் முகநூல், வாட்ஸ் அப் மூலம் பழகி அவர்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகத் தகவல் வெளியானது. மேற்கண்ட கும்பலிடம் சிக்கி மீண்ட பெண் ஒருவர் அளித்த புகாரில் போலீஸார் 4 இளைஞர்களைக் கைது செய்தனர்.

இதில் முக்கியப் புள்ளியான திருநாவுக்கரசு என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில் பின்னர் பொதுமக்கள் போராட்டம் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் செல்போனிலிருந்து போலீஸாரிடம் பல்வேறு வீடியோக்கள் சிக்கின.

ஆரம்பத்தில் வழக்கில் சுணக்கம் காட்டிய போலீஸார், பின்னர் வழக்கை சரியாகக் கையாளாமல் சாக்குப்போக்கு சொன்னதால் போராட்டம் பெரிதாக வெடித்தது. இதனால் வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.

பின்னர் சிபிஐக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் பெண் எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் நடக்கும் விசாரணையின் முதற்கட்டமாக முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.

அதில் திருநாவுக்கரசு பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில் பெரிய கும்பல் அவருக்கு கீழ் இயங்கியது என்றும், மாதம் ரூ.2 லட்ச ரூபாய் வரை அந்த கும்பலுக்கு திருநாவுக்கரசு செலவு செய்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மாதம் ரூ. 2 லட்சம் செலவு செய்யவேண்டும் என்றால் அதற்கான வருமானம் எந்த அளவுக்கு இருக்கும், எந்த வகையில் யார் யாரிடம் எல்லாம் பணம், நகை பறித்தார்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு மூலம் எவ்வளவு பணம் பார்த்தார்கள், வீடியோக்களை வெளியில் விற்று பணம் பார்த்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில் திருநாவுக்கரசு பல தகவல்களைக் கூறியுள்ளதாகவும் அதில் முக்கியமாக இளைஞர் ஒருவர் குறித்து தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவரை ஓரிரு நாளில் போலீஸார் கைது செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அவர் கைது செய்யப்பட்டால், இந்த நெட்வொர்க்கில் உள்ள மேலும் சிலரும் அடுத்தடுத்து சிக்குவார்கள் எனத் தெரிகிறது. தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் மேலும் வீடியோக்கள் சிக்கியதாகவும், அவற்றில் சபரிராஜன், சதீஷ் ஆகியோரின் அந்தரங்க  வீடியோக்கள்தான் அதிகம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுவரை எத்தனை வீடியோக்கள் கிடைத்துள்ளன என்பது குறித்து இறுதி செய்யவில்லை. விசாரணை தொடர்ந்து நடக்கிறது என போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x