Published : 14 Mar 2019 05:34 PM
Last Updated : 14 Mar 2019 05:34 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்: சிபிசிஐடி போலீஸார் வேண்டுகோள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், விவரமறிந்தவர்கள் தாராளமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என சிபிசிஐடி போலீஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழக காவல் துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முறையாக நடக்கவில்லை என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. பின்னர் இன்று சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (24) ஆகியோருடன் சேர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை மடக்கி அவர்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். அதைக் கொண்டு அந்தப் பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவர்களிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றைப் பறிப்பதைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர்

இந்தக் கும்பலால் கடந்த 6 ஆண்டுகளில் பொள்ளாச்சியில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தங்களின் எதிர்காலமே நாசமாகிவிடும் என்ற அச்சத்தில் கடந்த மாதம் வரை எந்தப் பெண்ணும் புகார் தெரிவிக்கவோ, தங்களின் குடும்பத்தினரிடம் பகிரவோ இல்லை.

இதனை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்தக் கும்பல், தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி பொள்ளாச்சியில் உள்ள அரசியல்வாதிகள் சிலருக்கு வீடியோவில் உள்ள பெண்களை மிரட்டி அவர்களிடம் அனுப்பியுள்ளனர். அதற்குக் கைமாறாக அவர்களிடமிருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது.

கடந்த மாதம் 24-ம் தேதி பொள்ளாச்சியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பித்து பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் போலீஸார் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரைக் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு தலைமறைவானார்.

இதையடுத்து கடந்த 5-ம் தேதி திருநாவுக்கரசை மாக்கினாம்பட்டியில் வைத்து கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து இளம் பெண்களின் ஆபாச  வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய 2 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

வழக்கில் மேலும் பலர் உள்ளனர் என்கிற கூற்றை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் மறுத்து பேட்டி அளித்ததும், நான்கு வீடியோக்கள் மட்டுமே கிடைத்தது என பேட்டி அளித்ததும், வழக்கு பற்றி யாராவது பேசினால் சட்ட நடவடிக்கை என மிரட்டியதும் எதிர்க்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதை மீறி அவரது பெயரை போலீஸார் வெளியிட்டதாகப் பிரச்சினை எழுந்தது. இதன் அடிப்படியில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற எழுந்த கோரிக்கை அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இதனிடையே சிபிஐக்கு மாற்ற டிஜிபி கோரிக்கை வைத்ததை அடுத்து சிபிஐக்கு மாற்றிப் பரிந்துரைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிபிஐ வழக்கை எடுக்கும்வரை சிபிசிஐடியே விசாரணை நடத்தும் எனவும் பெண் எஸ்பி நிஷா தலைமையில் விசாரணை நடக்கும் என்றும் அதை சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் கண்காணிப்பார் என்றும் கூறப்பட்டது.

நேற்று சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், எஸ்பி நிஷா பார்த்திபன் உள்ளிடோர் நேரில் இறங்கி விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிபிசிஐடி சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

''பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பான விவரங்களையோ அல்லது இவ்வழக்கில் எதிரிகளால் பாதிக்கப்பட்ட தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறினால் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை வெளியில் கூறாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.

மேலும் இவ்வழக்கு தொடர்பான படங்களோ அல்லது வீடியோக்களோ இருந்தால் தொலைபேசி மூலம் கீழ்கண்ட எண்ணில் உள்ள தொலைபேச ிமூலம் அளிக்கலாம். தங்களுக்கு தெரிந்த விவரங்களை கடிதம் மூலமும் அளிக்கலாம்.

தங்களுக்கு தெரிந்த விவரங்களை நேரில் தெரிவிக்க விரும்பினால், எஸ்.பி அலுவலகம், சிபிசிஐடி காவல்துறை, அவினாசி சாலை, கோவை 18. என்கிற முகவரியில் நேரடியாக வந்து அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும்.

வழக்கின் முக்கியத்துவம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் நலன் கருதி வழக்குக்குத் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி  போலீஸாரின் மெயில் ஐடி மற்றும் செல்போன் எண்ணையும்  வெளியிட்டுள்ளனர். 9488442993 மெயில் ஐடி: cbcidcbecity@gmail.com  

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x