Published : 14 Mar 2019 12:50 PM
Last Updated : 14 Mar 2019 12:50 PM
பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குக்குப் பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என்பதை மக்களும், வேட்பாளர்களும் உணர வேண்டும். அது தவிர்க்கப்பட்டால் மட்டுமே நியாயமாக தேர்தல் நடைபெறும்.
ஆகவே, வாக்குக்குப் பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என்பதை செய்தித்தாள், ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்த உத்தரவிட வேண்டும். பணம் கொடுப்பதைத் தடுக்கும் கண்காணிப்புக் குழுக்களை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டும். வாக்குக்குப் பணம் கொடுப்பது குறித்து புகார் அளிப்பதற்கான எண்ணை விளம்பரப்படுத்த உத்தரவிட வேண்டும்.
தேர்தல் விதிமீறல்கள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அதற்குக் காரணமான அரசியல் கட்சியிடமிருந்து மொத்த செலவுத் தொகையையும் வசூலிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, சென்னை உயர் நீதிமன்றம் "பிளக்ஸ் போர்டு, பேனர்களை வைப்பது தொடர்பாக ஏற்கெனவே பல உத்தரவுகளை வழங்கியுள்ளது. ஆகவே, தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்களை அதிக அளவில் லாரி, பேருந்து, ஆட்டோ, வேன் ஆகியவற்றில் அழைத்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது.
ஆகவே அரசியல் கட்சியினரின் கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கில், அனைத்து அரசியல் கட்சியினரும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கவும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT