Published : 14 Mar 2019 11:52 AM
Last Updated : 14 Mar 2019 11:52 AM

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையை நேற்று சிபிசிஐடி போலீஸார் தொடங்கினர்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சிலர், தலைமை நீதிபதி தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி அமர்வின் முன்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும், உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், தமிழக அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என முறையிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறி கோரிக்கையை நிராகரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x