Published : 14 Mar 2019 11:12 AM
Last Updated : 14 Mar 2019 11:12 AM

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஃபிளக்ஸ்!- ‘நாசாவுக்காக ஆய்வு செய்த உடுமலை விஞ்ஞானி

அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட கொங்கு மண்டலத்துக்காரர், தற்போது உடுமலையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத ஃபிளக்ஸ் தயாரித்து வருவதுடன், பாதுகாப்பு மற்றும் ஜவுளித் துறைகளில் பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் கோபிநாத் பாலா(43).  பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடைய வேண்டும். அதற்காக, இந்திய விஞ்ஞானிகள் முழுமூச்சுடன் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். நானும், என்னால் முடிந்த அளவு பங்களிப்பை செய்வேன்” என்கிறார் இவர்.

கோவையில் இவரை சந்தித்தபோது, வியப்பூட்டும் தகவல்களை தெரிவித்தார். “திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைதான் சொந்த ஊர். பெற்றோர் பாலசுப்பிரமணியம்-சரஸ்வதி.  அப்பா ஜவுளி ஆலை நடத்தி வந்தார். உடுமலைப்பேட்டை சீனிவாசா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். பள்ளியில் படிக்கும்போதே தினமும் ஜவுளி ஆலைக்குச் சென்று, அங்கு நடப்பதை கூர்ந்து கவனித்து, பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், கர்நாடக மாநிலம் தாவன்கரேவில் பி.டெக். ஜவுளித் தொழில்நுட்பம் படித்தேன். தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் ஜவுளித் துறையில்

எம்.எஸ். பாலிமர் கெமிஸ்ட்ரி படித்தேன். அப்போது, தொழிற்சாலைக் கழிவால் பாதிக்கப்பட்ட நீரை சுத்திகரிப்பது குறித்து ஆய்வு செய்தேன். தொடர்ந்து, பி.ஹெச்டி. படித்தேன். அதில், பிளாஸ்டிக் தொழில்நுட்பமான `கண்டக்டிங் பாலிமர்’ குறித்து ஆய்வு செய்தேன். எனினும், வேலை கிடைத்ததால், பி.ஹெச்டி.யை முடிக்கவில்லை.

`நாசா’வுக்கு சமர்ப்பித்த திட்டங்கள்!

அமெரிக்காவில் உள்ள ஜைவெக்ஸ் நிறுவனத்தில், நானோ பொருட்கள் ஆய்வு விஞ்ஞானியாக வேலைக்குச் சேர்ந்தேன். அணுவைக் கொண்டு கம்ப்யூட்டர் சிப், செயற்கை வைரம் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும், பெரிய ஆராய்ச்சி நிறுவனம் அது.  அமெரிக்காவில் பல்வேறு நுணுக்கமான, கடினமான ஆராய்ச்சிப் பணிகளை, சிறிய நிறுவனங்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்கள். மேலும், ஆராய்ச்சிக்காக `ஸ்மால் பிஸினெஸ் இனிஷியேட்டிவ் ரிசர்ச் கிரான்ட்` என்ற உதவித்தொகை கொடுப்பார்கள். இதைப் பெறுவதற்காக, இரு ஆராய்ச்சிகளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு அனுப்பினேன். ஒன்று ஹூஸ்டனில் உள்ள ஜான்சன்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கும், மற்றொன்றை அலபாமாவில் உள்ள மார்ஷல் ஸ்பேஸ் ப்ளைட் மையத்துக்கும் ஆராய்ச்சித் திட்டங்களை சமர்ப்பித்தேன். அதில் ஒன்று, ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும், எடை குறைந்த, உறுதியான பொருள். இதற்கு, `மல்ட்டி ஃபங்ஷனல் நானோ மெட்டீரியல்’ என்று பெயர். மற்றொன்று, விண்வெளி வீரர்கள் அணியும் உடைக்கான பொருள். அதாவது, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாசாவுக்கு, கதிர்வீச்சை தடுக்கும், குறைந்த எடையிலான பொருளை தயாரித்தேன். ஏனெனில், செவ்வாய்க்கிரகத்துக்கு போய்ச்சேரவே ஓராண்டாகும். அங்குள்ள கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்கும். கதிர்வீச்சைத் தடுக்க உதவும் உடையைத் தயாரிக்க எனது கண்டுபிடிப்பு பயன்படும். இதுதவிர, மற்றொரு திட்டத்துக்கும் தலைவராக செயல்பட்டேன். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உயர் ஆய்வு மையத்துக்காக, விமானம், ஏவுகணையில் பயன்படுத்தப்படும் வலிமையான கார்பன் ஃபைபர் தயாரிக்கும் திட்டம் அது. மூன்று திட்டங்களையும் நாசா ஏற்றுக் கொண்டது.

டெக்னிக்கல் டெக்ஸ்டைல்...

இந்த நிலையில், 2007-ல் குடும்ப சூழல் காரணமாக உடுமலைக்கு திரும்ப வந்துவிட்டேன். அப்பாவின் ஜவுளி ஆலையை உயர்த்தும் முயற்சியில், மற்றொரு ஆலையைத் தொடங்கினேன். வழக்கமான துணி உற்பத்தியுடன், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் துறையில் கவனம் செலுத்தினேன். செராமிக்ஸ் கலந்து புல்லட் ஃப்ரூப் உடை தயாரிப்பது, விண்வெளி வீரர்களுக்கான உடை உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். இதற்கிடையில், ஆட்கள் பற்றாக்குறை, வெளி மாநில மற்றும் வெளி நாட்டுப் போட்டிகள், ஜவுளிக் கொள்கை உள்ளிட்டவற்றால், ஜவுளித் தொழில் நசிவை சந்தித்தது. உண்மையில், தற்போது ஜவுளித் தொழில் மிகப் பெரிய பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. நஷ்டம் காரணமாக ஒரு ஆலையில் ஜவுளி உற்பத்தியை நிறுத்தி, அதை டெக்னிக்கல் டெக்ஸ்டைல் பணிகளுக்குப் பயன்படுத்தினோம்.

கடந்த ஜனவரி மாதம் முதல், அனைத்து கார்களுக்கும் முன் பகுதியில் இரண்டு பாதுகாப்பு காற்றுப் பைகள் (ஏர் பேக்) அமைக்க வேண்டுமென மத்திய அரசு சட்டமியற்றியுள்ளது. இதில் உள்ள துணியை இந்தியாவில் யாரும் தயாரிப்பதில்லை. இதை தயாரிப்பது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும், புல்லட் ஃப்ரூப் மீது போடப்படும் ஆடை, கறுப்புப் பூனைப் படை, கமாண்டோக்கள் அணியும் ஆடைகளை நவீனப்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம்.

மறுசுழற்சி, மக்கும் தன்மை கொண்ட ஃபிளக்ஸ்!

இதுதவிர, மற்றொரு பொருளை தயாரித்துள்ளோம்.  அது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா ஃபிளக்ஸ். பொதுவாக, பிளாஸ்டிக் பைகளுக்கு அடுத்தபடியாக, ஃபிளக்ஸ் ரகங்கள்தான் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பின்னர், இவை மண்ணில் வீசப்படுகின்றன. பாலிவினைல் குளோரைடு (பிவிசி) என்ற நச்சுத்தன்மையும், புற்றுநோயை உருவாக்கும் தாலேட் என்ற ரசாயனமும் கொண்டது இந்த ஃபிளக்ஸ். இது, சுற்றுச்சூழலுக்கும், பயன்படுத்துவோரின் உடலுக்கும் தீங்கானது. மக்கவும் செய்யாது, மீண்டும் பயன்படுத்தவும் முடியாது. எனவே, இரு வகையிலான ஃபிளக்ஸ் தயாரித்தோம். ஒன்று, ரீசைக்கிளபுள் சைனேஜ் (ஃபிளக்ஸ்). இதை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தலாம். சட்டை தயாரிக்க, வீட்டுக் கூரையாக  உபயோகிக்க என பல பயன்கள் உண்டு.

மற்றொன்று 100 சதவீதம் மக்கும் தன்மை கொண்ட  பயோ-டீகிரேடபுள் சைனேஜ்.

இது 6-7 மாதங்களில் பவுடராக மாறி, முற்றிலும் மக்கிவிடும். இதில் உள்ள ரசாயனங்களும் கெடுதல் தன்மை இல்லாதவை. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இவற்றை உண்ணும் கால்நடைகளுக்கும் ஒன்றும் ஆகாது. இவ்விரு ஃபிளக்ஸ்-கள் மூலம் அனைத்து வகையான விளம்பர பேனர்களைத் தயாரிப்பதுடன், பல்வேறு உபயோகங்களுக்கும் பயன்படுத்தலாம்.

தற்போதைய நிலையில், 3, 4 பேர் மட்டுமே இந்த தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். இதனால், சாதாரண ஃபிளக்ஸைக் காட்டிலும் கொஞ்சம் விலை கூடுதல்தான். அதேசமயம், நுகர்வு அதிகரித்தால், விலை தானாகக் குறைந்துவிடும். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். கேரள மாநிலத்தில் மக்காத ஃபிளக்ஸ் முழுமையாக தடை செய்யப்பட்டுவிட்டது. இதேபோல, தமிழகத்திலும் மக்காத ஃபிளக்ஸுக்குப் பதிலாக, மக்கும் தன்மை கொண்ட அல்லது மறுசுழற்சி முறையிலான ஃபிளக்ஸ் பயன்படுத்தினால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு இருக்காது. ஐரோப்பா முழுவதிலும் பெரும்பாலும் இவ்விரு ஃபிளக்ஸ்-களே பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் இந்த நிலை விரைவில் வரும் என்றார் நம்பிக்கையுடன்.

(இவரைத் தொடர்பு கொள்ள: balugopi @gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x