Published : 06 Mar 2019 05:56 PM
Last Updated : 06 Mar 2019 05:56 PM

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியின் முதல் பிரச்சாரக் கூட்டம், சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

நகரங்களில் சிறந்தது இந்த காஞ்சிபுரம் என காளிதாசர் கூறியிருக்கிறார். காசியின் நாடாளுமன்ற உறுப்பினரான நான் காஞ்சிபுரம் வந்திருக்கிறேன். நமது உறவு என்பது வலிமையானது. தமிழக கலாச்சாரம் பழமையானது. என்றென்றும் உயிருடன் இருக்கும் செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து பங்காற்றி வருகிறோம். ஜெயலலிதாவின் கனவு கண்ட முன்னேற்ற பாதையில் சென்றுகிறோம். எண்ணூர் சமையல் எரிவாயு முனையத்தை தொடங்கி வைத்துள்ளேன். ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம்.

விக்கிரவாண்டி - தஞ்சை உட்பட சாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது சென்னையையும், டெல்டா மாவட்டத்தையும் இணைக்கும் திட்டம் இது. 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்கள் விரைவாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எம்ஜிஆர் சிலையை  திறந்து வைத்ததில் மிக்க மகிழச்சி. எம்ஜிஆர் தமிழக மக்களின் மனதை வென்றவர். ஏழை - எளிய மக்களுக்காக பங்காற்றியவர் எம்ஜிஆர். வறுமையில் நிலையில் இருக்கும் மக்களுக்கு எம்ஜிஆர் செயல்படுத்திய திட்டங்கள் பெரும் உதவியாக இருந்தது.

இந்த நேரத்தில் 2 மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறேன். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும். அதுபோலவே, சென்னை விமான நிலையத்தில் தமிழ் மொழியில் இனி அறிவிப்பு வெளியிடப்படும். விமான வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்புகள் இனிமேல் தமிழிலும் வெளியிடப்படும்.

சில  ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்றேன். அங்கு எம்ஜிஆர் பிறந்த இடத்துக்கு சென்றேன். இலங்கை தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடு கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆயிரம் வீடு வழங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. யாழ்பானம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை எனக்கு உண்டு. அங்குள்ள தமிழ் மக்களுடன் பேசினேன். தமிழர்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் மத்திய அரசு ஓடிச் சென்று உதவும்

மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கி இருந்தபோது அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆப்கானிஸ்தானில் பாதிரியார் பிரேம் சிக்கியபோது அவரை மீட்டோம். அபிநந்தன் 2 நாட்களில் மீட்டோம் என்பது உலகுக்கே தெரியும். 1900 மீனவர்களை மீட்டுள்ளோம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுள்ளோம். சவுதி இளவரசருடன் பேசி 800 பேரை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

காஞ்சிரபுத்தின் நெசவாளர்கள் இந்த நாட்டின் பெருமைக்குரியவர்கள். ஜவுளித்துறைக்கு உதவ பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.  

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x