Published : 25 Feb 2019 02:44 PM
Last Updated : 25 Feb 2019 02:44 PM

தனித்துப் போட்டியிட்டபோது மக்கள் பாராட்டினார்கள்; ஆனால் ஓட்டுப் போடவில்லை: அன்புமணி விளக்கம்

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என சொன்னபோது மக்கள் பாமகவுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (திங்கள்கிழமை) அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளோம். ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் உள்ளிட்ட திட்டங்களை வரவிடாமல் இருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதியளித்துள்ளார். எழுவர் விடுதலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என அதிமுக தெளிவுபடுத்தியிருக்கிறது.

நீட் விலக்கு பெற தொடர் அழுத்தம் கொடுப்போம். மதுவிலக்கு வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கொள்கை முடிவு எடுத்திருக்கின்றனர். அதற்குக் காரணம் பாமக தான். தேர்தலுக்கு முன்பு 500 தேர்தலுக்குப் பின்பு 500 என மதுக்கடைகளை தமிழக அரசு மூடியிருக்கிறது. முழுவதும் 1-2 ஆண்டுகளில் மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது சிரமம் என்று சொன்னார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சொல்லியிருக்கிறோம்.

கூட்டணிக்கான காரணம் இதுதான். 2004-ல் புகையிலையை எதிர்த்துப் போராடினோம். அதன்பிறகு எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதித்தோம். அதிகாரம் வந்ததும் அதனை நிறைவேற்றினோம். இதனை உறுதியாக எங்களால் நிறைவேற்ற முடியும் என்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்.

இரு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என 2011-ல் சொன்னோம். உண்மை தான், மறுக்கவில்லை. அன்றைய சூழல் வேறு. அப்போது ஜெயலலிதா, கருணாநிதி இருந்தனர். இப்போது அந்த 2 தலைவர்கள் இல்லை. முக்கியமானது, தமிழக நலன்கள் மீட்கப்பட வேண்டும்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என சொல்லி 8 ஆண்டுகளாகின்றன. உரிய அங்கீகாரம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு 6% வாக்குகள் பெற்று 3-வது இடம் வகித்தோம். அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழக மக்களும் எங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையைப் பாராட்டினார்கள். ஆனால், ஓட்டுப் போடவில்லை. பாமகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை. கடந்த நான்கு தேர்தல்களில் வெற்றி பெறவில்லை.

தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனியாக வரும் 15 ஆண்டுகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதனால் தான் வியூகத்தை மாற்றியுள்ளோ. இது மக்கள் நலனுக்கான முடிவு" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x