Published : 25 Feb 2019 08:10 AM
Last Updated : 25 Feb 2019 08:10 AM

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் மாநகராட்சி நடவடிக்கை; சென்னையில் 36 மையங்களில் மாலைநேர மருத்துவ சேவை அறிமுகம்: பல்துறை சிறப்பு சிகிச்சைகள் கிடைப்பதால் மக்கள் வரவேற்பு

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் சென்னையில் 36 மையங்களில் மாலை நேர பல்துறை சிறப்பு மருத்துவ சேவையை மாநகராட்சி வழங்கி வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 138 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 14 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பொது மருத்துவம் மற்றும் கர்ப்பிணி நலம், குழந்தைகள் நலம் போன்ற புறநோயாளிகளுக்கான சேவைகள் காலை 8 முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது. பிற மருத்துவ சேவைகளுக்கு புறநகர் மருத்துவமனைகள் மற்றும் பொது மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் சென்றனர்.

மேலும் மாலை நேரங்களில் மருத்துவரிடம் செல்லும் பழக்கம் சென்னை மாநகர மக்களிடம் அதிகமாக உள்ளது. அந்த நேரத்தில் மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கிடைக்காதது மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகள் இல்லாதது போன்ற குறைபாடுகள், தனியார் மருத்துவமனைகள், ஆலோசனை மையங்களுக்கு சாதகமாக இருந்தது. அங்கு ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

இதைத் தடுக்க மாநகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ், மாலை நேர பல்துறை சிறப்பு மருத்துவ சேவை வழங்கும் மையங்களை திறந்துள்ளது. இது ஏழை மக்களுக்கு பேருதவியாக உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் மாநகராட்சி மருத்துவமனைகளில், 36 இடங்களில் இந்த மாலை நேர சிறப்பு மருத்துவ சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவை மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை இயங்கும். இதில் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு மருத்துவர் (தனியார் அல்லது ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்) வருகிறார். அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.2500 வீதம் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. இம்மையங்களில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மகளில் நலம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, மனநலம், ஆர்த்தோ, பிசியோதெரபி ஆகிய சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

குறுகிய காலத்தில் 87 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக 14,687 நோயாளிகள் பொது மருத்துவ சிகிச்சையும் 13,486 நோயாளிகள் குழந்தைகள் நல சிகிச்சையும் பெற்றுள்ளனர். மாநகராட்சியின் அண்ணாநகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 12,720 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். அருகில் உள்ள மையங்களின் அமைவிடங்களை அறிய, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய தகவல் பலகையை பார்க்கலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இது தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த எம்.சாந்தி கூறும்போது, “எனது குழந்தைக்கு அடிக்கடி சளி பிடிக்கும். குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்றால் ரூ.150 ஆலோசனை கட்டணமும்,மருந்துக்கு ரூ.150-ம் செலவாகும்.

இந்த மாலை நேர மருத்துவமனையால், குழந்தைகள் நல மருத்துவர் மூலமாக இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைக்கிறது. இது ஏழை மக்களுக்கு வரப்பிரசாதம்” என்றார்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் கூறும்போது, "பல் மருத்துவரிடம் சென்றால் குறைந்தபட்சம் ரூ.300 வரை செலவாகும். தொடர் சிகிச்சைக்கும் செலவிட வேண்டும் என்பதால், பல் வலியை சகித்துக்கொண்டேன். பின்னர் அந்த பல்லை பிடுங்க வேண்டியதாயிற்று. மாநகராட்சியின் புதிய சேவையில் சிறு பிரச்சினை இருந்தாலும், தொடக்கத்திலேயே இலவச சிகிச்சை பெற்று சரி செய்து கொள்ள முடிகிறது. இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x